EPS vs Stalin: போக்குவரத்துத் துறையைத் தனியார்மயமாக்கும் முயற்சியா.? திமுக அரசுக்கு எதிராகக் களம் இறங்கிய EPS!

Advertisements

ஒப்பந்த அடிப்படையில் தனியார் மனிதவள நிறுவனங்களிடமிருந்து ஓட்டுநர்-நடத்துனர் நியமனங்களுக்கான ஒப்பந்தப் புள்ளியைத் திமுக அரசின் போக்குவரத்துத் துறை கோரியுள்ளதற்கு கண்டனத்தைத் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, போக்குவரத்து துறையைத் தனியார்மயமாக்கும் முயற்சியில் ஒரு படியாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் நாகர்கோவில் மண்டலங்களில் பேருந்துகளை இயக்குவதற்கு ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களை ஏற்பாடு செய்யத் தனியார் மனிதவள நிறுவனங்களிடமிருந்து மின்னணு டென்டர்கள் வரவேற்கப்படுவதாகத் திருநெல்வேலி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் அதன் மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள ஒப்பந்த புள்ளி கோரும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பிற்கு தொழிற்சங்கம் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. மேலும் அரசியல் கட்சிகளும் எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகிறது.

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய பேருந்துகள் எதையும் கொள்முதல் செய்யாமல், ஓட்டை ஒடிசலான பேருந்துகளால் ஏற்கனவே போக்குவரத்துத் துறையை அதளபாதாளத்திற்கு தள்ளிய இந்த விடியாத் திமுக அரசு, போக்குவரத்துத் துறையைத் தனியார்மயமாக்கும் முயற்சியின் ஒரு படியாகத் தான் தற்போது ஓட்டுநர்-நடத்துனர் நியமனங்களை தனியார் வசம் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளதோ என்ற சந்தேகம் நிலவுகிறது.

நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய மண்டலப் போக்குவரத்துத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒப்பந்தப்புள்ளிகளை ரத்து செய்வதுடன், போக்குவரத்துக் கழகத்தைத் தனியார்வசமாக்கும் எவ்வித முயற்சியாக இருப்பினும் அதனைக் கைவிட்டு, முறையாகப் பணியமர்த்தி, போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, போக்குவரத்துத் துறையின் கட்டமைப்பைச் சீர்செய்து பொதுமக்களுக்குப் பயண “சேவை”யை வழங்குமாறு விடியாத் திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *