
“தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மே 6 ஆம் தேதி ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத்தை ஆளுநர் மாளிகையில் சந்தித்து பேசினார். அப்போது, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி அமைக்க அழைக்குமாறு அப்போது உரிமை கோரி சட்டமன்ற உறுப்பினர்கள் அளித்த ஆதரவு கடிதங்களையும் இணைத்து ஆளுநரிடம் சமர்ப்பித்தார் விஜய்.
இந்த சந்திப்புக்கு பிறகு சில மணி நேரங்களில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் தான் ஆளுநராக இருக்கும் கேரள மாநிலத்துக்கு நேற்று மாலை திரும்பி விட்டார்.இதன் மூலம் மே எட்டாம் தேதி முதலமைச்சராக விஜய் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவி ஏற்றுக்கொள்வார் என்ற நிலை இப்போது தள்ளிப் போயிருக்கிறது. வழக்கமாக சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற பொதுத் தேர்தல்கள் நடந்து முடிந்த பிறகு தனிப்பெரும் கட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியின் சட்டமன்ற தலைவரை ஆட்சி அமைக்கும்படி, ஆளுநரோ குடியரசு தலைவரோ அழைப்பது ஜனநாயக மரபு.
அவர்கள் முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட பின் இரண்டு வாரங்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொள்ளப்படுவார்கள். இதுதான் தமிழ்நாட்டிலும் இப்போது நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த முறை ஆளுநர் உடனடியாக விஜயை ஆட்சி அமைக்குமாறு அழைப்பு விடுக்கவில்லை. அதற்கு மாறாக, நான் சற்று ஆலோசித்து விட்டு சொல்கிறேன் என்று விஜய்க்கு பதில் சொல்லி அனுப்பி இருக்கிறார்.
ஆளுநர் ஏன் விஜய்யை முதல்வர் பதவியேற்க அழைக்கவில்லை? இதற்கு காரணம் என்னவென்று பார்ப்போம். 108 சட்டமன்றத் தொகுதிகளில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றிருந்தாலும், விஜய் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே எம்எல்ஏவாக இருக்கிறார். ஆக மொத்தம் 107 சட்டமன்ற உறுப்பினர்கள் இப்போது தமிழக வெற்றி கழகத்திற்கு இருக்கிறார்கள். மேலும் காங்கிரஸ் கட்சி தன்னுடைய ஐந்து எம்எல்ஏக்கள் விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால், எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சியின் நிர்வாகிகளோடு விஜய் தரப்பில் தொடர்பு கொண்டு வாய்மொழியாக ஆதரவு கேட்கப்பட்டது. ஆனால் நீங்கள் எழுத்துப்பூர்வமாக கடிதமாக தாருங்கள் என அந்த கட்சிகளிடமிருந்து பதில் வந்தது. இதையடுத்து தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகளின் தலைமைக்கு விஜய் அரசு அமைப்பதற்கு ஆதரவு கேட்டு முறைப்படி கடிதம் எழுதப்பட்டது.
இந்த கடிதத்தின் அடிப்படையில் முடிவெடுப்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் உயர்நிலைக் கூட்டத்தை மே எட்டாம் தேதி கூட்டியிருந்தார். ஆனால் அது திடீரென இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மாநில குழு கூட்டத்தை கூட்டிருக்கிறது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கூட்டப்படும் வழக்கமான மாநில குழு கூட்டம் தான் என்றாலும் , இந்த கூட்டத்தில் விஜய் அனுப்பிய கடிதம் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.
இவ்வாறு ஒரு பக்கம் அரசியல் ரீதியாக ஆதரவு திரட்டும் முயற்சியில் விஜய் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் நிலையில் ஆளுநர் ஏன் விஜய்யை முதல்வர் பதவி ஏற்பதற்கு அழைப்பு விடுக்கவில்லை என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது. இருபது ஆண்டுகால திமுக கூட்டணியை முறித்துக் கொண்டு விஜய் கட்சியோடு கூட்டணி அமைத்த காங்கிரஸின் முடிவு திமுக தரப்பில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அதேநேரம் டெல்லி பாஜக மேலிடமும் இந்த காங்கிரஸ் தவெக கூட்டணியால் கடும் அதிருப்தி அடைந்திருக்கிறது. அதுமட்டுமல்ல விஜய் முதல்வராக பதவியேற்கும் விழாவுக்கு ராகுல் காந்தி வர இருக்கிறார் என்கிற தகவலும் பரவியது. இதுவும் பாஜகவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால்தான் இது போன்ற சந்தர்ப்பங்களில் இயல்பாகவே ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும் ஆளுநர் இந்த முறை விஜய்க்கு அந்த வாய்ப்பை வழங்கவில்லை. 118 சட்டமன்ற
உறுப்பினர்களின் ஆதரவை உறுதிப்படுத்திய பிறகு ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பது என்பதுதான் ஆளுநரின் முடிவாக இருக்கிறது. இதற்கிடையே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இப்போதைய 47 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டத்தை கூட்டினார். இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது, ‘தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க போதுமான இடங்கள் இல்லை என்ற நிலையில் நாம் இப்போது ஆதரவளிக்க வேண்டாம்.
தேர்தலுக்கு முன்பே நாம் கூட்டணி பற்றிய பேச்சு நடத்திய போது அவர்கள் மிக அதிக டிமாண்ட் வைத்தார்கள். அதன் பிறகு இது சரிபடாது என்று நாம் விட்டுவிட்டோம். இப்போது அவர்களுக்கு ஆட்சி அமைப்பதற்கு 8 முதல் 10 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில் நாம் ஆதரவளிக்க வேண்டிய அவசியம் இல்லை. இப்படி சிறு சிறு கட்சிகளோடு கூட்டு சேர்ந்து விஜய் ஆட்சி அமைத்தால் அது எப்படி இருக்கும் என்ற உத்தரவாதமும் இல்லை.
ஒரு வருடம் கூட இந்த ஆட்சி நீடிக்குமா என்ற கேள்வியும் இருக்கிறது. எனவே இப்போது நாம் அவசரப்பட வேண்டிய தேவையில்லை. விஜய் படும் பாடுகளை பார்த்து ரசிப்போம்’ என்று கூறியிருக்கிறார் எடப்பாடி. தொடர்ந்து, புதுச்சேரியிலுள்ள ரிசார்ட் ஒன்றில் அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். த.வெ.க தலைவர் விஜய், ஜெயலலிதா போன்று பல மடங்கு ஈகோ பார்ப்பவர். தனக்கு தேவைப்படும் 11 சீட்டுகள் வேண்டி யாரிடமும் நேரில் சென்று ஆதரவு கேட்க மாட்டார்.
அதற்கு அவரது ஈகோ மற்றும் கௌரவம் இடிக்கும். எனவே தன் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களைத்தான் ஏவுவார். இந்தப் போக்கை ஒரு சீட் வைத்திருக்கும் கட்சித் தலைவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அப்படித்தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. தனித்து நின்று தேர்தலில் போட்டியிட்ட நமக்கு 107 இடங்கள் தான் கிடைச்சிருக்கு. ஆட்சியமைக்க இன்னும் 11 சீட்டுகள் தேவை.
நமக்குத் தோதாக உள்ள கட்சித் தலைவர்களிடம் போனில் பேசுவோம். அவர்கள் சம்மதித்தால் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டு நேரில் போய் சந்தித்து சால்வை அணிவித்து ஆதரவு கோருவீர்கள். அவர்களும் எதிர்ப்பு அரசியல் செய்தாலும் இவ்வளவு தூரம் நேரில் வந்து ஆதரவு கோருகிறாரே என்று சற்றே இறங்கி வருவார்கள்.
காங்கிரஸ் விஜயின் கடிதத்திற்கே ஓடோடி வந்து விட்டது. மற்ற கட்சியினரோ அவர் அவ்வளவு பெரிய ஆளா? நேரில் ஆதரவு கேட்டால் குறைஞ்சா போயிடுவாரா என்று கேட்டால் – மனதில் நினைத்தாலோ என்ன ஆகும்? அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.



