
தி.மு.க. அரசு போராட்டங்களைப் பேச்சுவார்த்தைமூலம் தீர்த்துவைக்க திராணியின்றி, அடக்குமுறையால் ஒடுக்க முயல்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை:அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளர்-நிறுவனம்-அரசு முத்தரப்பு பேச்சுவார்த்தையில் முழுமையான தீர்வு எட்டப்படாத நிலையில், அரசு தரப்பில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகச் செய்திகள் வழங்கப்பட, தொழிலாளர்கள் அதனை முற்றிலுமாக மறுத்துப் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று காலைப் பேருந்துகளில் ஏறி, காவல்துறையினர் சாம்சங் தொழிலாளர்கள் இருக்கிறார்களா என்று சோதனையிட்டதாகவும், நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்திருப்பதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகுறித்து நான் நாள்விடாது சுட்டிக்காட்டி வருகிறேன். அத்தகு குற்றங்களைச் செய்தவர்களைப் பிடிப்பதில் தி.மு.க. அரசு காட்டாத முனைப்பை, நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடும் தொழிலாளர்களை ஒடுக்குவதில் காட்டுவதேன்?
போராட்டங்களைப் பேச்சுவார்த்தைமூலம் தீர்த்துவைக்க திராணியின்றி, அடக்குமுறையால் ஒடுக்க முயலும் தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனம். உழைப்பாளர் தினத்தன்று மட்டும் சிகப்பு சட்டை போட்டுகொண்டு, “நானும் தொழிலாளி” என்று மேடையில் மட்டும் முழங்கும் முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு சிகப்பு சட்டைமீது உண்மையிலேயே மதிப்பிருக்குமாயின், இது போன்ற ஜனநாயக விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விடுத்து, கைது செய்யப்பட்ட தொழிலாளர்களை உடனடியாக விடுவிப்பதுடன், தமிழக அரசு மீண்டும் தலையிட்டு, தொழிலாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, உரிய பேச்சுவார்த்தைமூலம் இந்தப் பிரச்சினையைச் சுமூகமாகத் தீர்க்குமாறு வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.




