
மதுரை அவனியாபுரத்தில் மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் திருவுருவச் சிலையை சேதப்படுத்தியதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் சிலையை சேதப்படுத்தியதை தொடர்ந்து கண்டனப் பதிவினை வெளியிட்டுள்ளார். இதில், மதுரை அவனியாபுரத்தில் இதயதெய்வம் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் திருவுருவச் சிலையை சேதப்படுத்திய சம்பவம் பெரும் கண்டனத்துக்குரியது என்று தெரிவித்தார். புரட்சித்தலைவரின் புகழையும் அவரது கொள்கைகளையும் நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாத கோழைகள் செய்த இழிச்செயலாகவே இதை கருதுவதாகக் குற்றம் சாட்டினார். மேலும், சிலையை சேதப்படுத்துவதன் மூலம் பொன்மனச் செம்மல் செய்த சாதனைகளையும் அவரது புகழையும்,மக்கள் மனதில் இருந்து குறைக்கவோ மாற்றவோ முடியாது என்று கூறினார். இதனையடுத்து, இச்செயலை செய்த சமூகவிரோதிகளை உடனடியாக கைது செய்ய தமிழக அரசிடம் வலியுறுத்தினார்.



