
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்குள் அத்துமீறி உள்ளே நுழைந்த மர்ம நபரை மடக்கி பிடித்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரைக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தமிழக எதிர்க்கட்சித் தலைவரின் வீட்டில் அத்துமீறி நுழைந்த மர்ம நபரால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னை பசுமை வழிச்சாலையில் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று வழக்கம்போல் வெளியில் சென்றிருந்த எடப்பாடி பழனிசாமி தனது காரில் வீட்டிற்குள் சென்றார்.
கார் வீட்டிற்குள் சென்ற நிலையில் அப்பகுதியில் பதுங்கி நின்று கொண்டிருந்த மர்ம நபர் ஒருவர் காருடன் சேர்ந்து வீட்டிற்குள் ஓடிச் சென்றார். இதனைச் சற்றும் எதிர்பாராத பாதுகாப்பு அதிகரிகள் உடனடியாகச் சுதாரித்துக் கொண்டு மர்ம நபரை ஓடிச் சென்று மடக்கி பிடித்தனர்.
இதனைத் தொடர்ந்து மர்ம நபர் அபிராமபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக எதிர்க்கட்சித் தலைவரின் வீட்டில் அத்துமீறி நுழைந்த மர்ம நபரால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

