
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மீண்டும் பிரிந்து சென்றவர்களை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது. இது தொடர்பாக ஆலோசிக்கவும், தற்போதுள்ள மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாக ஆலோசிக்க வருகிற 9ஆம் தேதி மாவட்ட செயலாளர் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், வருகின்ற 9.8.2024 – வெள்ளிக் கிழமையன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது என்பதைத் தெரிவித்துக்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒத்திவைக்க இது தான் காரணமா.?
இந்தநிலையில் தற்போது 82 மாவட்ட செயலாளர்கள் உள்ளதை அதிகரிக்க ஆலோசிக்கப்பட்டது. இதற்குப் பல்வேறு மாவட்டத்தில் உள்ள மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாகக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் ஆடி வெள்ளி தினம் என்பதால் மற்றொரு தினத்திற்கு ஒத்திவைக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



