
இதுவரை இலவசமாகப் பயன்படுத்தியக்கூடிய எக்ஸ்.காம் விரைவில் கட்டணச் சேவையாக மாறும் என்று எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்…
எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும், தொழிலதிபருமான எலன் மஸ்க், முன்னணு சமூக ஊடக வலைத்தளமான ட்விட்டரின் பெயரை ‘எக்ஸ்’ என்று மாற்றி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய மஸ்க் மற்றும் அவரது நிறுவன ஊழியர்கள் ட்விட்டரை தீவிரமாக மாற்ற முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில், இதுவரை இலவசமாகப் பயன்படுத்தியக்கூடிய எக்ஸ்.காம் விரைவில் கட்டணச் சேவையாக மாறும் என்று எலன் மஸ்க் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம், அனைத்து எக்ஸ் வாடிக்கையாளர்களும் தங்களது சேவைகளைப் பெற விரும்பினால், ஒரு குறிப்பிட்ட தொகையை மாதாந்திர சந்தாவாகச் செலுத்த வேண்டும். எக்ஸ் அதாவது ட்விட்டரில் உலா வரும் போலி கணக்குகளுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், சிஎன்பிசி அறிக்கையின்படி, இந்த மாதத் தொகை எவ்வளவு என்று மஸ்க் குறிப்பிடவில்லை.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் உரையாடலின்போது எலன் மஸ்க், சில எக்ஸ் தொடர்பான புள்ளிவிவரங்களையும் வெளிப்படுத்தினார். அதன்படி, எக்ஸ் தற்போது 55 கோடி மாதாந்திர செயலியில் உள்ள சந்தாதாரர்களை கொண்டுள்ளது. அதில், தினமும் 10 கோடி முதல் 20 கோடி பதிவுகள் பகிரப்படுகின்றன.
இந்த மாதாந்திர கட்டணத்தின் மூலம் எக்ஸில் உள்ள வாடிக்கையாளர்களில் எத்தனை பேர் உண்மையான வாடிக்கையாளர்கள் மற்றும் எத்தனை போலி வாடிக்கையாளர்கள் என்பதை கண்டறியலாம் என்று கூறப்படுகிறது. மேலும், இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு மற்றும் மஸ்க் ஆகியோர் இணையத்தில் அதிக அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என நம்பப்படும் AI-இன் அச்சுறுத்தல்கள் மற்றும் அதை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது பற்றி விவாதித்தனர்.
எக்ஸ் பிரீமியம் தற்போது அமெரிக்காவில் ஒரு மாதத்திற்கு $8 (£6.50) கட்டணம் செலுத்தப்பட்டு வருகிறது. சந்தாதாரர் எந்த நாட்டில் இருக்கிறார் என்பதை பொறுத்து விலை மாறுபடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மாதாந்திர கட்டணம் எக்ஸில் கொண்டு வந்தால், பெரும்பாலான பயனர்கள், எக்ஸில் இருந்து வெளியேறும் அபாயம் ஏற்படும். இதைத் தொடர்ந்து, எக்ஸ் நிறுவனத்திற்கு கிடைக்கும் விளம்பர வருவாய் குறைந்து, பெரிய இழப்பைச் சந்திக்கும் சூழலை உருவாக்கும்.


