Election Commission of India: 6 மாநில உள்துறை செயலாளர்களுக்கு ஆப்பு.. தேர்தல் ஆணையம் அதிரடி!

Advertisements

தேர்தல் விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து, 6 மாநில உள்துறை செயலாளர்களைப் பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. கடந்த முறை போன்று, இந்த முறையும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது.

அமலுக்கு வந்த தேர்தல் விதிகள்:

வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கும் தேர்தல், ஜூன் 1ஆம் தேதி 7 கட்டங்களாக நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மக்களவை தேர்தலைத் தவிர, ஆந்திர பிரதேசம், ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மாநிலங்களுக்குச் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் விதிகள் அமலுக்கு வந்தது. தேர்தல் விதிகள் அமலுக்கு வந்தவுடன், மாநிலத்தின் முக்கிய அதிகாரிகளைத் தேர்தல் ஆணையம் பணியிட மாற்றம் செய்வது வழக்கமான நடவடிக்கை.

அதிரடி காட்டும் தேர்தல் ஆணையம்:

அந்த வகையில், குஜராத், பீகார், உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களின் உள்துறை செயலாளர்களைப் பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. அதேபோல, மேற்குவங்க டிஜிபி ராஜீவ் குமாரை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

மும்பை மாநகராட்சியின் ஆணையர் இக்பால் சிங் சாஹல் மற்றும் கூடுதல் மற்றும் துணை ஆணையர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் பணியுடன் தொடர்புடைய அதிகாரிகளை இடமாற்றம் செய்யுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

குறிப்பிட்ட மாவட்டத்தில் மூன்றாண்டுகளை நிறைவு செய்த அதிகாரிகள் அல்லது சொந்த மாவட்டத்தில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்ய அறிவுறுத்தியது. இருந்தபோதிலும், தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளை மகாராஷ்டிர தலைமை செயலாளர் பின்பற்றவில்லையெனக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அதிகாரிகளை இன்று மாலை 6 மணிக்குள் பணியிட மாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *