
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மனைவியைக் கணவனே கூலிப்படையை ஏவி கொலை செய்துவிட்டு நாடகமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார்(33). தனியார் டயர் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பிரவீனா(24). இவர்களுக்குச் சர்வேஷ்வரன்(5), யோகித்(3) என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், பிரவீனா பெரம்பலூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 2ம் ஆண்டு பயின்று வந்தார். இந்நிலையில், ராஜ்குமாருக்கும் திருப்பெயர் கிராமத்தைச் ஒரு பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அந்தப் பெண்ணோடு ராஜ்குமார் அடிக்கடி ஊர் சுற்றி கொண்டு உல்லாசமாக இருந்து வந்தார்.
இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஆயுத பூஜை உள்ளிட்ட தொடர் விடுமுறையை அடுத்து ராஜ்குமார் மகன்களைப் பிரவீனாவின் அப்பா வீட்டிற்கு சென்று விட்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பணிக்குச் செல்வதாகக் கிளம்பிய ராஜ்குமார், மனைவியை உறவினர் வீட்டில் விட்டுச் செல்வதாகக் கூறி இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது வழிமறித்த 4 பேர் கொண்ட கும்பல் இருவரையும் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில், வெட்டுப்பட்ட பிரவீனா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது மர்ம கும்பல் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டதாகக் கதறியபடி கூறியுள்ளார். பின்னர் மோப்பநாய் உதவியுடன் விசாரணை நடத்தியபோது ராஜ்குமாரை கவ்வி பிடித்துள்ளது.
இதனையடுத்து அவரிடம் விசாரணை நடத்தியபோது முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்துள்ளார். இறுதியில் கிடுக்குப்பிடி விசாரணையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மனைவியைக் கூலிப்படையை வைத்துக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரைக் கைது செய்துள்ள போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய கூலிப்படையினரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

