
மக்களின் நலனுக்காக வாழ்ந்து, அவர்களின் நல்வழிப்படுத்தி, மறுமையிலும் இறைவனிடம் காத்திருக்கும் முகமது நபியின் பிறந்த நாளே மிலாடி நபி தினமாகக் கொண்டாடப்படுகிறது.
மக்களுக்கு நல்ல போதனைகளை வழங்கி நேர்வழிப்படுத்தும் வழிகாட்டியாக இருக்கும் முகமது நபியின் பிறந்த நாள் மிலாடி நபி தினமாகக் கொண்டாடப்படுகிறது. கிபி 570ம் ஆண்டு ரபி உல் அவ்வல் மாதம் 12ம் நாள் மெக்காவில் ஹஜ்ரத் அப்துல்லா, ஹஜ்ரத் ஆமினா அவர்களுக்கு முகமது நபி பிறந்தார். முகமது நபி பிறப்பதற்கு முன்பே தந்தை இறந்து விட்டார்.
அவர் பிறந்த 6வது வயதில் தாயும் இறந்து விட்டார். பிறகு முகமது நபியை வளர்த்த பாட்டனார் ஹஜ்ரத் அப்துல் முத்தலிப்பும் இறந்தார். அதன்பிறகு சிறிய தகப்பனார் ஹஜ்ரத் அபுதாலிப் பராமரிப்பில் முகமது நபி வளர்க்கப்பட்டார். இப்படி சிறு வயதிலேயே பெற்றோர், உறவினர்களைப் பறிகொடுத்த முகமது நபி பிறருக்கு நம்பிக்கை கொடுக்கும் ஒரு மனிதராகத் தனது வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டினார்.

திருகுர்ஆன் கூறும் ஒருலட்சம் நபிமார்களில் இறுதியான நபி முகமது நபி தான். ஆனால், அவருக்கான தனித்துவம் மற்ற நபிகளைவிட அதிகமாகவே இறைவன் கொடுத்துள்ளதாக இஸ்லாம் மார்க்கம் கூறுகிறது. முகமது நபி தோன்றுவதற்கு முன்பும், அவர் வளரும் வரையிலும், அரபு நாட்டில் வாழ்ந்தவர்கள் மோசமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
கூட்டம் கூட்டமாக மது அருந்துவது, பெண் குழந்தைகளைக் கொள்வது, பெண்களை நடனமாட வைப்பது போன்ற சமூக விரோத செயல்கள் அரங்கேறி வந்தன. இதனைப் பார்த்த நபி அவர்கள் தன்னை இறைத்தூதராக அறிவித்து அவர்களை நல்வழிப்படுத்தி மார்க்க அறிவுரைகளை வழங்கினார்.
முகமது நபிக்கு 40வது வயதில் அல்லாஹ்விடமிருந்து இறைத்தூதர் என்ற வஹி வந்தது. அதன்பிறகு தன்னை சேர்ந்தவர்களை இறை நாட்டம் கொண்டவராக மாற்றினார். பின்னார் அங்கிருந்த மக்களுக்கு நல்போதனை கொடுத்து இறைவன் மீது நம்பிக்கை கொண்டு வந்தார். அந்தக் கால கட்டத்தில் முகமது நபியை யூதர்கள் எதிர்த்துப் போரிட்டனர்.

எனினும், முகமது நபியின் இறை நம்பிக்கையும், அவரது நற்செயல்களுமே வெற்றிப்பெற்றது. முகமது நபிக்குக் கதீஜா, ஆயிஷா என்ற இரு மனைவிகள் மிகவும் விஷேமானவர்கள். ஆயிஷா மூலம் பிறந்த பாத்திமா (ரலி) அவர்கள் பெண்களுக்கு ஷிபாயத் வாங்கி கொடுக்கும் நாயகியென இஸ்லாம் மார்க்கம் கூறுகிறது.
முகமது நபி இறைவனிடமிருந்து திருகுர்ஆனை பெற்று தந்தவர். ஹீரா குகையில் திருகுர்ஆன் மறைகளை ஓதியவர். அதன்பின்னர், ”வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே“ எனக் கூறி அனைவரையும் மார்க்க வழியில் அழைத்தவர். தனது வாழ்நாள் முழுவதும் மக்களின் நல் வாழ்க்கைக்காகவும், நல்ல நெறிகளுக்காகவும், இறை பற்றுக்காகவும் போராடிய நபிகள் நாயகம் கிபி 632ம் ஆண்டு ரபியுள் அவ்வல் மாதம்12ம் தேதி உலகை விட்டு மறைந்தார். அவரது பிறப்பும், இறப்பும் ஒரே நாளில் இறைவன் எழுதி வைத்திருந்தார்.

தான் உலகை விட்டுப் பிரியும் நேரம் வந்ததும் அரபு மக்களை அழைத்த முகமது நபி தனது கடைசி உரையை நிகழ்த்தினார். அதில், ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமை உடன் பிறந்தவராகக் கருத வேண்டும். தம்மிடம் அடைக்கல பொருள் வைத்திருப்பவர்கள் அதை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும். மனைவி, பிள்ளைகளுக்குரிய பாதுகாப்பு வழங்குங்கள்.
அவர்களை அவமதிக்காமல் கண்ணியப்படுத்துங்கள். ஜகாத்தை திருப்தியோடு கொடுங்கள், ஹஜ் கடமையை நிறைவேற்றுங்கள். யாரையும் ஏமாற்றாதீர்கள், பொய் கூறாதீர்கள். துரோகம் இழைக்காதீர்கள். ஒவ்வொருவரையும் தோழமையுடன் பாருங்கள்” என நீண்ட அறிவுரையை வழங்கினார். அது உணர்வுப்பூர்வமாக இருந்ததுடன் ஒவ்வொரு அரபிகளின் கண்களையும் கண்ணீரால் நனைத்தது.
இப்படி மக்களின் நலனுக்காக வாழ்ந்து, அவர்களின் நல்வழிப்படுத்தி, மறுமையிலும் இறைவனிடம் காத்திருக்கும் முகமது நபியின் பிறந்த நாளே மிலாடி நபி தினமாகக் கொண்டாடப்படுகிறது.

