
தமிழ்நாட்டின் நலனை முதன்மைப்படுத்தும் அரசுத் துறை சார்ந்தவர்களை அவமதிக்கும் கீழ்த்தரமானச் செயலை எடப்பாடி பழனிச்சாமி செய்துள்ளார் என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் முதலீடுகள் தொடர்பான எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ளார். இதில், தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தொழில்துறை முதலீடுகள் பற்றி எந்தவித அடிப்படை புரிதலுமின்றி வழக்கம்போல திருமண வீட்டில் ஊர் வம்பை பேசும் பெருசுகள் போல பேசி இருப்பதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து, எதிர்க்கட்சித் தன் அரசியல் கணக்குகளுக்காக திமுக அரசை விமர்சிப்பதாக நினைத்து, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்து தமிழ்நாட்டின் நலனை முதன்மைப்படுத்தும் அரசுத் துறை சார்ந்தவர்களை அவமதிக்கும் கீழ்த்தரமான செயலை மேற்கொள்வது நல்லதல்ல என்று குற்றம் சாட்டினார்.
தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரான வகையில் உண்மைக்கு மாறான, பொய்யை வெளியிடுவது எதிர்க்கட்சித் தலைவருக்கு அழகல்ல என்றும் கூறினார்.



