
வேளாண் விளைபொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகப் புதுச்சேரி திமுக சார்பில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா. சிவா தலைமையில் நடைபெற்ற கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் 1000 க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
வேளாண் விளைபொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மக்கள் விரோத தொழிலாளர் விரோத மத்திய பாஜக அரசைக் கண்டித்தும்,
பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு தாரைவார்ப்பதை கண்டித்தும், தொழிலாளர்களின் நான்கு சட்ட தொகுப்புகளைத் திரும்பப் பெற வேண்டும், இந்தியாவிலேயே ரேஷன் கடை இல்லாத மாநிலமாகப் புதுச்சேரி மாநிலம் உள்ளதை மாற்றி ரேஷன் கடைகளை மீண்டும் திறந்து அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும்,
புதுச்சேரியில் அறிவிக்கப்பட்ட அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்திற்கு நிதி ஒதுக்கிச் செயல்படுத்திட வேண்டும், மூடிக்கிடக்கும் பஞ்சாலைகள், கூட்டுறவு சர்க்கரை ஆலையைத் திறக்க வேண்டும், அரசுச் சார்பு நிறுவன ஊழியர்களுக்கு நிலுவை சம்பளம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசைக் கண்டித்து புதுச்சேரி மாநில திமுக மற்றும் தொமுச சார்பில் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா. சிவா தலைமையில் அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் அனிபால் கென்னடி, சம்பத் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுகவினர் அண்ணா சிலையிலிருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாகக் கண்டன பேரணியாக வந்து தலைமை தபால் நிலையம் அருகில் கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



