
தி.மு.க. ஆட்சியில் பெண்கள் வெளியில் தலைகாட்டவே அஞ்சுகிறார்கள் என்று பா.ஜ.க.தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக, தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், நேற்றிரவு கோவை விமான நிலையத்தின் பின்புறம், தனியார் கல்லூரி மாணவி ஒருவர் மர்ம கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியளிக்கிறது என்றும், பாதிக்கப்பட்ட மாணவி முழு உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன் என்றும் தெரிவித்தார்.
மேலும். கடந்த நான்கரை ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் ஒருவித பதற்றத்துடனேயே நமது பொழுது விடிகிறது, எந்த ஊரில் எந்தப் பெண்ணின் வாழ்வு சூறையாடப்பட்டதோ என்ற பயத்துடனேயே செய்தித்தாள்களை நாம் புரட்ட வேண்டியிருக்கிறது என்றும், வீட்டில் இருந்தாலும் சரி, வெளியில் போனாலும் சரி, பெண்கள் வேட்டையாடப்படுகிறார்கள் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தைத் தலைகுனிய விடமாட்டேன் என வெட்டி வசனம் பேசும் திமுக ஆட்சியில், நமது வீட்டுப் பெண்கள் வெளியில் தலைகாட்டவே அஞ்சுகின்றனர் என்றும், இந்த அவலங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே, கவலையின்றி கம்பு சுற்றிக் கொண்டிருக்கிறார் என்றும், இதுதான் நாடு போற்றும் நல்லாட்சியின் லட்சணமா என்று பா.ஜ.க.தலைவர் நயினார்-நாகேந்திரன் தெரிவித்தார்.



