
புதிதாக பதவியேற்றுள்ள அரசு மும்மொழிக் கொள்கையை எதிர்க்க வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
திருநெல்வேலி மேற்கு மாவட்ட திமுக கட்சி அலுவலகத்தில், கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக மாநில துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டு நிர்வாகிகளுக்குக் கட்சி பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார். இதன்பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, மும்மொழி கொள்கையைத் திமுக ஆட்சியில் இருந்தப்போதும் சரி இப்போதும் சரி, தொடர்ந்து எதிர்த்துக்கொண்டு தான் இருக்கிறது என்று தெரிவித்தார்.
புதிதாக பதவியேற்றுள்ள அரசு தமிழக மக்களின் உணர்வைப் புரிந்து கொண்டு மும்மொழிக் கொள்கையைத் தொடர்ந்து எதிர்க்க வேண்டும் என்று கூறினார்.
மேலும், எந்தவிதமான மொழித் திணிப்பையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்..


