
பிரேமலதா விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சிகள் மட்டும் அல்லாது அனைத்து தரப்பு மக்களின் மத்தியிலும் ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது . அதிமுக , பாஜக , திமுக , தவெக என பல்வேறு கட்சிகளுடன் பிரேமலதா விஜயகாந்த் பேசி வருவதாகவும் ஆனால் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன .
இந்த நிலையில் தேமுதிக யாருடன் கூட்டணி என்பது குறித்து அந்த கட்சியின் இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் பரபரப்பாக பேசியிருக்கிறார். தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றன . இருந்த போதிலும் தேமுதிக இன்னும் கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை . இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் பெரிய முத்தூர் கிராமத்தில், தேமுதிக நிர்வாகி இல்ல காதணி விழா நடந்தது .
இதில் தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் கலந்து கொண்டு பேசினார் அவர் பேசும் பொழுது கூட்டணி பற்றி பல தகவல்களை தெரிவித்தார். தமிழகத்தில் ஜெயலலிதாவிற்கு பிறகு பெண் தலைவர்கள் யாரும் இல்லை தேமுதிக கட்சிக்கு எதிர்காலம் இல்லை என்று பலர் அவதூறுகளை பேசினார்கள். ஆனால் இப்பொழுது தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஜான்சி ராணி போல் தமிழகத்தில் எழுச்சி உடன் இருப்பதை மக்கள் பார்க்கிறார்கள் கடலூரில் நடந்த மாநாடு இதற்கு உதாரணமாகும் .
தேமுதிக யாருடன் கூட்டணி சேர்வார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்து உள்ளனர். தேமுதிகவை பொருத்தவரையில் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய கட்சியாக இருக்கிறது . திமுக , அதிமுகவுக்கு பிறகு ஜாதி மதம் இல்லாத மூன்றாவது பெரிய கட்சியாக தேமுதிக இருக்கிறது தேமுதிக எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கிறதோ அந்த கட்சி தான் வெற்றி பெறும் .
தேமுதிகவிற்கு தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வாக்குகள் இருக்கிறது . தற்பொழுது திமுகவும் சரி , அதிமுகவும் சரி 170 தொகுதிகளை நிற்க வேண்டும் என நினைக்கிறார்கள். அதனைக் கொள்கை முடிவாக தெரிவிக்கிறார்கள். தேமுதிகவிற்கும் அது போன்ற கொள்கைகள் உள்ளது .
கடந்த 2011 ஆம் ஆண்டு , தேர்தலில் தேமுதிக 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் வெற்றி பெற்றது . அதில் தற்போது ஒன்பது முதல் 10 எம்எல்ஏக்கள் இல்லை என்றாலும் மீதமுள்ள 20 முன்னாள் எம்எல்ஏக்கள் உள்ளனர் . அவர்களை நாங்கள் பாதுகாக்க வேண்டும் . இதனை திமுக அதிமுக போன்ற கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும் . வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக அதிமுக ஆகிய கட்சிகள் 170 இடங்களில் போட்டியிட வேண்டும் என நினைப்பது போல் தேமுதிகவில் உள்ள முன்னாள் எம்எல்ஏக்களின் எதிர்காலத்தை பார்க்க வேண்டும்.
அந்த 20 எம்எல்ஏக்கலை நாங்கள் பாதுகாத்தாக வேண்டும் . உங்கள் கட்சியை மட்டும் பார்க்காதீர்கள் உங்களை ஆட்சியில் அமர்த்துவதற்கு தான் நாங்கள் 20 தொகுதிகளை கேட்கிறோம் . கூட்டணியில் இடங்களை கேட்பது எங்களது உரிமை கூடுதல் தொகுதிகள் ஒதுக்கி தருவது உங்களது கடமை . தேமுதிக முதலமைச்சராக கேட்கவில்லை. உங்களை முதலமைச்சராக நாங்கள் கேட்கிறோம் எனவே 20 தொகுதிகள் எங்களுக்கு கண்டிப்பாக தேவைப்படுகிறது என பேசியிருக்கிறார் .
அவரது பேச்சு மூலம் தேமுதிக 20 தொகுதிகளை கேட்டு வருவது வெளிப்படையாக தெரிந்திருக்கிறது . ஆனால் திமுக அதிமுக உள்பட எந்த கட்சியும் 20 தொகுதிகளை ஒதுக்கி தருவதற்கு எந்த விதமான வாய்ப்புகளும் இல்லை என்பது முக்கியமான செய்தியாக பார்க்கப்படுகிறது. இதனிடையே பிரேமலதா விஜயகாந்த் தூத்துக்குடியில் தனது தேர்தல்பிரச்சாரத்தை தொடங்குகிறார் . சென்னை விமான நிலையத்தில் அவரை நிருபர்கள் பேட்டி கண்டபோது திமுக ஆட்சி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த பிரேமலதா விஜயகாந்த் திமுக ஆட்சியில் 50 சதவீதம் நல்லது நடந்திருக்கிறது என்று குறிப்பிட்டார். மேலும் திமுக ஆட்சியில் நிறைய குறைகள் இருப்பதாக மக்கள் சொல்கிறார்கள் . அவையெல்லாம் சரி செய்யப்படும் என்று நம்புகிறேன் என திமுகவுக்கு ஆதரவாக அவர் பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .
இதற்கிடையே, நடிகர் தாடி பாலாஜி லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் தொடங்கிய கட்சியில் இணைந்திருக்கிறார் என்ற தகவலும் வெளிவந்திருக்கிறது . சினிமா நடிகரும் சின்னத்திரை நடிகருமான தாடி பாலாஜி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து பணியாற்றி வந்தார். தற்பொழுது அதிலிருந்து விலகி பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் தொடங்கிய இலட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்திருக்கிறார். அந்த கட்சியில் அவருக்கு தேர்தல் பிரச்சார பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டு இருக்கிறது .
இது குறித்து, தாடி பாலாஜி பேசும் பொழுது தமிழக வெற்றி கழகத்தை புசி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா , நிர்மல் குமார் ஆகியோர் தவறாக வழி நடத்துகிறார்கள் . விஜய் மீது நான் குற்றம் சொல்ல மாட்டேன். இரண்டாம் கட்ட தலைவர்கள் தான் காரணம் விஜய் அவர்களை நம்பி இருக்கிறார் . மக்கள் விஜய்யை நம்பி இருக்கிறார்கள்.
ஆனால் இரண்டாம் கட்ட தலைவர்கள் தவறாக வழி நடத்துகிறார்கள் என்பது வேதனைக்குரியது என தெரிவித்துள்ளார் .



