TTV Dhinakaran:தி.மு.க.விற்கு எதிராகப் பேசினால் ஹிட்லர் பாணியில் கைது செய்கின்றனர்!

மதுரை:மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியில் நடைபெற்ற கட்சி நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் அ.ம. மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கள்ளர் பள்ளிகளை அரசு பள்ளிகளுடன் இணைக்கக் கூடாது என்பது எனது விருப்பம். என்ன காரணத்திற்காக இது போன்ற பள்ளிகள் உருவாக்கப்பட்டது என ஆராய்ந்து அதன் பயன் முழுமையடையும் வண்ணம் தொடர்ந்து கள்ளர் பள்ளிகளை அதன் சீரமைப்புத்துறையுடன் இருப்பதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. போதை கலாசாரம் மூலை முடுக்கெல்லாம் பரவி மாணவர்கள், இளைஞர்கள் எல்லாம் பாதிக்கப்பட்டு வருவது தமிழ்நாட்டிற்கு பெரும் கேடாக அமைய போகிறது. கள்ளச்சாராயம் காய்ச்சுகிறவர்கள், விற்கிறவர்களை தடுப்பதில்லை. ஆனால், தி.மு.க.விற்கு எதிராகப் பேசுகின்ற எதிர் கட்சியைச் சேர்ந்தவர்களை ஹிட்லர் பாணியில் கைது செய்கின்றனர்.

இன்று நீதிமன்றம் சாட்டை துரைமுருகனை கைது செய்து பின்னர், அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியதை நாம் பார்க்கிறோம். அரசுக்கு எதிராகப் பேசினால் வழக்கு தொடரலாம், அதே நேரத்தில் யாருமே எங்களைப் பற்றியோ அரசாங்கத்தைப் பற்றியோ வாய்திறந்தால் நாங்கள் கைது பண்ணுவோம் என மிரட்டுவதற்கு தமிழ்நாட்டில் யாருமே பயப்பட மாட்டார்கள்.

ஆர்.எஸ்.பாரதி, கண்ணப்பன் உள்ளிட்டோர் பட்டியலின அதிகாரிகளைப் பார்த்துப் பேசியதற்கெல்லாம் இந்த அரசாங்கம் வழக்கு போட வேண்டும். அதை விட்டுவிட்டு தி.மு.க.வைப்பற்றிப் பேசுவதை தான் வன்கொடுமை சட்ட அளவிற்கு கைது செய்வோம் எனப் பேசுகிறார்கள்.

பிற கட்சிகளைச் சேர்ந்தவர்களைக் கைது செய்வது என்பது சர்வாதிகார போக்காகத் தான் பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் எதிர்கட்சிகளைச் சேர்ந்தவர்களும், மற்ற தலைவர்களை ஒருமையில் பேசுவது, அவமரியாதையுடன் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்பது தான் எல்லோருடைய விருப்பம். சசிகலாவின் அ.தி.மு.க இணையும் என்ற கருத்துபற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *