
நடிகர் தனுஷ் சமீபத்தில் தனது நற்பணி மன்றத்திற்கு கொடியை அறிமுகம் செய்து இருந்த நிலையில், தற்போது அடுத்த கட்ட நகர்வாக நற்பணி மனறத்திற்கு தொகுதி வாரியாக உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளுக்கு உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக தனுஷ் நற்பணி மன்றம் சார்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் விஜய் ஆட்சியை பிடித்து இருப்பதால், திரைத்துறையில் அரசியல் கனவுடன் காத்திருந்த நடிகர்களுக்கு விஜய்யின் வெற்றி நம்பிக்கையை கொடுத்து இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த சூழலிதான் நடிகர் தனுஷ் தனது நற்பணி மன்றத்திற்கு கடந்த சில வாரங்களுக்கு கொடி ஒன்றை அறிமுகம் செய்தார். அதேபோல, தனது பிறந்த நாளை முன்னிட்டு கல்லூரி மைதானம் ஒன்றில் பிரமாண்டமாக நலத்திட்ட உதவிகளை செய்தார். அதில் தனுஷ் பேசிய பேச்சுகளும் அரசியலுக்கு அவர் வருவதை உறுதி செய்யும் விதமாக ஆணித்னமாக அவரது ரசிகர்கள் மனதில் பதிந்தது.
நலத்திட்ட நிகழ்ச்சிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய தனுஷ், “இங்கே இவ்வளவு பேர் கூடியிருக்கிறோம்.. நம் ஒற்றுமைக்குப் பெரிய சக்தி உண்டு. அதற்கு நோக்கமும் உண்டு. சும்மா வந்தோம், புகைப்படம் எடுத்தோம் என்று இருக்கக் கூடாது. உங்களைச் சுற்றியுள்ளவர்கள் சிக்கல்களில் இருந்தால் உதவுங்கள். அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளைச் செய்யுங்கள்.
அதற்கு எல்லாரும் கைகோர்க்க வேண்டும். நீங்கள் அதனைச் செய்வீர்கள் என நம்புகிறேன்’ என்று பேசியிருந்தார்.தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை சுற்றிலும் கட் அவுட்கள் போஸ்டர்கள் என அவரது நற்பணி மன்றத்தினர் ஆரவாரமாக சிறப்பாக செய்திருந்தனர்.
இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது தனுஷ் நிச்சயம் விரைவில் அரசியல் கட்சி தொடங்க வாய்ப்பு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பலரும் விவாதித்தனர்.இந்த சூழலில், தனுஷ் அரசியல் களத்தை நோக்கி காய் நகர்த்துவதை உறுதி செய்யும் விதமாக புதிய அறிவிப்பு ஒன்று அவரது நற்பணி மன்றம் சார்பில் வெளியாகியுள்ளது.
அதாவது, சட்டமன்ற தொகுதி வாரியாக உறுப்பினர்களை சேர்க்க தனுஷ் அறிவுறுத்தியிருப்பதாக அவரது நற்பணி மன்றம் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி, கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி, கோவை சிங்கா நல்லூர் சட்டமன்ற தொகுதி, கோவை சூலூர் சட்டமன்ற தொகுதி, கோவை மேட்டுப்பாளையம் தொகுதி ஆகிய 5 தொகுதிகளுக்கு உட்பட்ட தலைவர் தனுஷ் நற்பணி இயக்கம் தொடங்கவும் உறுப்பினர்களை சேர்க்கவும் கோவை மாவட்ட தலைவரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷ் நற்பனி இயக்கத்தின் இந்த அறிவிப்பு அவரது அரசியல் நகர்வை வேகப்படுத்துவது போல அமைந்து இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தரப்பில் பேசப்படுகிறது. கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில், திமுக வென்ற கோவை தெற்கு தொகுதி இந்த லிஸ்டில் இடம் பெறவில்லை.
தற்போது அறிவிப்பு வெளியாகியிருக்க கூடிய 5 தொகுதிகளும் தவெக வென்ற தொகுதிகள் ஆகும். முதல் கட்ட அறிவிப்பு என்றாலும் கூட உறுப்பினர்கள் சேர்க்கையை தொடங்க வேண்டும் என்று தனுஷ் நற்பணி இயக்கம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு இருக்கும் 5 தொகுதிகளிலும் தவெக வென்ற தொகுதிகள் என்பதும் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
போற போக்க பாத்தா சினிமாவில் இருக்கும் நண்டு சிண்டெல்லாம் அரசியலுக்கும் வரும் என்கிறார்கள் அரசியல் அனுபவம் கொண்ட ஆசான்கள். ஆக வேங்கை தனுஷ் அரசியலில் குதித்து விஜய்க்கு சாவாலாக அரசியலில் அமர்ந்து ஆட்சி செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்..!




