
ராமேஸ்சுவரம்:
நமது மரபுச் சின்னங்களை இளைய தலைமுறையினர் அறிந்து, பாதுகாக்க ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19 முதல் 25 வரை உலக மரபு வாரம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அழிந்துவரும் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான தொண்டி அருகேயுள்ள இடையமடம் சமணப்பள்ளியை தொல்லியல் சின்னமாகப் பாதுகாக்க வேண்டும் என ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது, “ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே சுந்தரபாண்டியன்பட்டினம், பாம்பாற்றின் கழிமுகப்பகுதியில் கோபாலமடம், ராமர் பாதம் என அழைக்கப்படும் கோயில், சமணப்பள்ளியென 2016 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது.
கருவறை, மகாமண்டபம், முன்மண்டபம் என்ற அமைப்பில் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. இதன் மகாமண்டப வலதுபுற சுவரில் 27செ.மீ. உயரமும், 17செ.மீ. அகலமும் உடைய நின்ற நிலையிலான 23-ம் சமண தீர்த்தங்கரர் பார்சுவநாதர் புடைப்புச் சிற்பம் உள்ளது. அதன் அமைப்பு கொண்டு கி.பி.9-ம் நூற்றாண்டில் இப்பள்ளி கட்டப்பட்டதாகக் கருதலாம். இதன் கருவறையில் அமர்ந்த நிலையில் சமண தீர்த்தங்கரர் கற்சிற்பம் இருந்து காணாமல் போனதாகச் சொல்லப்படுகிறது. கருவறை விமானமின்றி உள்ளது.

