
மாமியாரை தீர்த்துக்கட்டிய மருமகள் வசமாகச் சிக்கி கொண்டாள்!
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமியாரை கள்ளக்காதலுடன் சேர்ந்து மருமகள் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவை அடுத்த பத்தரஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுநாத். இவரது மனைவி ராஷ்மி. மஞ்சுநாத் தனது பெற்றோர் மற்றும் மனைவியுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 5ம் தேதி மஞ்சுநாத்தின் தாயார் திடீரென உயிரிழந்தார். முதலில் மாரடைப்பால் இறந்ததாகக் கூறப்பட்ட நிலையில் தனது தாயார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மகன் மஞ்சுநாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். சந்தேகத்தின் பேரில் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது முன்னுக்கு பின் முரணாகப் பதிலளித்துள்ளார். இதனையடுத்து அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் தனது கள்ளக்காதலுடன் சேர்ந்து மாமியாரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து போலீசாரிடம் ராஷ்மி அளித்த வாக்குமூலத்தில்;- எங்கள் வீட்டின் மாடியில் இருக்கும் அக்ஷய் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்தப் பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அக்ஷய்க்கு பணம் தேவைப்படும் போதெல்லாம் கொடுத்து வந்தேன். இந்த விவகாரத்தைத அறிந்த மாமியார் என்னைக் கண்டித்து இதுதொடர்பாகத் தனது மகனிடம் கூறுவதாக மிரட்டியுள்ளார்.
இதனால், அக்ஷயும் நானும் சேர்ந்து மாமியரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தோம். அதன்படி சாப்பாட்டில் அதிகளவு தூக்க மாத்திரை கலந்து கொடுத்துக் கழுத்தை இறுக்கி கொலை செய்தேன் எனக் கூறினார். இதனையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

