
மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய பாதிப்பால் வேளச்சேரி, மடிப்பாக்கம், புறநகர் சென்னை, வட சென்னை பகுதிகளில் இன்னும் மழைநீர் வடியாமல் தேங்கியுள்ளது.
சென்னையில் எப்போதும் சாதாரண அளவில் மழை பெய்தாலே மிகப்பெரிய அளவில் பாதிப்பைச் சந்திக்கும் பகுதியாக திகழ்வது வேளச்சேரி ஆகும். இந்த சூழலில், சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழையால் வேளச்சேரி முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. அந்த பகுதியில் தண்ணீர் மிகவும் மோசமாக தேங்கியுள்ளது. பல இடங்களில் இடுப்பளவு தண்ணீர் தேங்கியும், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தும் காட்சி அளிக்கிறது.
வேளச்சேரியை போல மடிப்பாக்கம் பகுதியிலும் தேங்கிய மழைநீர் இன்னும் வற்றாமல் இருக்கிறது. அங்கும் தண்ணீர் இடுப்பளவு வரையில் இருப்பதால் மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர். அங்கு மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
#Chennai #ChennaiRains2023 #ChennaiFloods2023 #CycloneMichuang #velachery #balajinagar #Pallikaranai pic.twitter.com/gDJv3on2CZ
— Anand Kumar (@m_anandk) December 5, 2023
வட சென்னையில் மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய பாதிப்பு மிகவும் மோசமாக உள்ளது. மூலக்கொத்தளம், மிண்ட், கொடுங்கையூர், ராயபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழைநீர் இன்னும் வடியாமல் உள்ளது. மூலக்கொத்தளத்தில் மார்பளவு தண்ணீர் தேங்கியுள்ளது. மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். புறநகர் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர், கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் 2015 வெள்ளத்தின்போது ஏற்பட்ட பரிதாப நிலை மீண்டும் ஏற்பட்டுள்ளது.
வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தும், முட்டியளவு தண்ணீர் புகுந்தும் காட்சி அளிக்கப்படுகிறது. முதலமைச்சர் தொகுதியான கொளத்தூர் பகுதியில் வீனஸ் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் தண்ணீர் இதுவரை தேங்கியுள்ளது.

