
சென்னை:
‘வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை (நவ.,27) புயலாக மாறும். புயலுக்கு ஃபெங்கல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது’ எனச் சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. நாகப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கு திசையில் சுமார் 630 கி.மீத்தொலைவில் தாழ்வு மண்டலம் அமைந்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் டெல்டாவை நோக்கி நகர்ந்து வருகிறது.
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை (நவ.,27) புயலாக மாறும். புயலுக்கு ஃபெங்கல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அடுத்த 2 நாட்களில் தமிழக-இலங்கை கடற்கரை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது.
செங்கல்பட்டு காஞ்சிபுரம், விழுப்புரம், சென்னை, புதுச்சேரி, கடலூர், காரைக்காலில் கனமழை பெய்து வருகிறது.காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வு காரணமாக, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில், அடுத்த நான்கு நாட்களுக்குக் கனமழை பெய்யும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து வருவதால், அடுத்த ஐந்து நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு இன்றும், நாளையும்(நவ.27) ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.


