
அக்ரி கிருஷ்ணமூர்த்தி தங்களைத் தாக்குவதாக நினைத்துக்கொண்டு, தான் தலைவராகக் கருதும் எடப்பாடி பழனிசாமியையே தரம் தாழ்த்திப் பேசிவருவதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சி.வி சண்முகம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அன்றைய சூழ்நிலைக்கேற்ப அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியைத் தேர்வு செய்ததாகத் தெரிவித்தார்.
ஆனால், இன்றுவரை ஒரு சட்டமன்றத் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும், ஊராட்சி மன்றத் தேர்தலிலும் அதிமுக வெற்றிபெற முடியவில்லை என்று குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து, ‘நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் அதிமுக 47 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது என அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறியதாகத் தெரிவித்தார்.
அப்படியென்றால், மீதமுள்ள 181 தொகுதிகளில் அதிமுக தோற்றதும் அவரது தலைமையின்கீழ் தானா?’ என்றும் விமர்சித்தார். மேலும், அக்ரி கிருஷ்ணமூர்த்தி தங்களைத் தாக்குவதாக நினைத்துக்கொண்டு, தான் தலைவராகக் கருதும் எடப்பாடி பழனிசாமியையே தரம் தாழ்த்திப் பேசிவருவதாகவும் தெரிவித்தார்.


