
கோவையில் புதிதாகத் திறக்கப்பட்ட ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் அதிவேகமாகச் சென்ற கார் லாரி மீது மோதியதில் காரில் பயணித்த ஒரு பெண் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
கோவையில் உப்பிலிப்பாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை பத்துக் கிலோமீட்டர் தொலைவுக்கு உயர்மட்ட மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தில் இரவு ஒன்றரை மணியளவில் அதிவேகமாகச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து கோல்டுவின்ஸ் அருகே நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் மோதியது.
இந்த விபத்தில் காரில் பயணித்த 20 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், இரண்டு ஆண்கள் என மூன்று பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
நொறுங்கிய காரில் இருந்தவர்களைத் தீயணைப்புத் துறையினர் மீட்டு உடல்களைக் கூறாய்வுக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த விபத்துக் குறித்து கோவை பீளமேடு காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்தப் பாலம் திறக்கப்பட்ட போது இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 7 மணி வரை பாலத்தில் செல்லக் காவல்துறையினர் தடை விதித்திருந்தனர்.
அது சமூக வலைத்தளத்தில் பேசுபொருளாக இருந்தது. எனவே இரவிலும் பயணிக்கத் தடையேதும் இல்லை எனக் கூறி இரண்டு நாட்களுக்கு முன் திறந்து விடப்பட்ட நிலையில் நள்ளிரவில் இந்த விபத்து நடந்திருப்பது குறிப்பிடத் தக்கது



