
பாஜக கட்சிக்கு மத்திய புலனாய்வு அமைப்புகளின் சோதனைக்குள்ளான கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்கிய அரசியல் நன்கொடைகள்குறித்து விரிவாக விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் (அமைப்பு) கே.சி.வேணுகோபால் கடிதம் எழுதியுள்ளார்.
அமலாக்கத் துறை, வருமானவரித் துறை மற்றும் மத்திய புலனாய்வு முகமை (சிபிஐ) போன்ற மத்திய அமைப்புகளின் சோதனைகளுக்கு உள்ளான நிறுவனங்கள் சோதனை நடந்த சில மணி நேரங்களில் பாஜகவுக்கு நன்கொடை வழங்கிய முறைபற்றி வெளியான தகவலைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி இந்தக் கடிதத்தை எழுதியுள்ளது.
மத்திய நிதியமைச்சருக்கு கே.சி.வேணுகோபால் எழுதியுள்ள அக்கடிதத்தில், “செய்தி அறிக்கை ஒன்றின்படி, கடந்த 2018-19 மற்றும் 2022-23 நிதியாண்டுகளில் சுமார் 30 நிறுவனங்கள் கிட்டத்தட்ட ரூ.335 கோடியைப் பாஜகவுக்கு நன்கொடையாக அளித்துள்ளன. இதில் 23 நிறுவனங்கள், புலனாய்வு அமைப்புகளின் சோதனைகளுக்கு முன்பு பாஜகவுக்கு நன்கொடை வழங்கியது இல்லை. புலனாய்வு அமைப்புகளின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து பல நிறுவனங்கள் பாஜகவுக்கு வழங்கும் நன்கொடையை அதிகரித்துள்ளன என்று கூறப்பட்டுள்ளது.
மேற்கூறிய நிகழ்வு புலனாய்வு அமைப்புகளின் மீது அழுத்தம் கொடுத்து, நன்கொடை என்ற வடிவத்தில் மிரட்டிப் பணம் பறிக்கும் ஆளுங்கட்சி செயலுக்கு மிகத் தெளிவான நிகழ்வுகளாகும் இது. நிச்சயமாக இவை மட்டும் மிரட்டிப் பணம் பறிக்கும் செயல் நடந்திருப்பதற்கான நிகழ்வுகள் மட்டுமே இல்லை.
பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மற்றும் விசாரணை அமைப்புகளால் எடுக்கப்பட்ட நவடிக்கைகள் தவறானது என்று நாங்கள் குற்றம்சாட்டவில்லை. ஆனால் அமலாக்கத் துறையின் விசாரணை வழக்குகள் இருக்கும் நிறுவனங்கள் ஏன் ஆளுங்கட்சியான பாஜகவுக்கு நன்கொடை வழங்க வேண்டும். அமலாக்கத் துறையின் விசாரணைக்குப் பின்னர் அந்த நிறுவனங்கள் பாஜகவுக்கு நன்கொடை வழங்கியது தற்செயல் நிகழ்வு மட்டும்தானா?
உங்களிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லையென்றால், பாஜகவின் கஜானா நிரம்புவதற்கு காரணமான காலவரிசை நிகழ்வுகள் ஒவ்வொன்றுக்கும் மறுப்பு அளிக்கத் தயாரா? உண்மையை விளக்க நீங்கள் தயாராக இல்லை என்றால், பாஜகவுக்காக நன்கொடையாகக் கொள்ளையடித்த இந்தச் சந்தேகத்துக்குரிய நிகழ்வுகள்குறித்து உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் உங்களை நீங்களே விசாரணைக்கு உட்படுத்திக்கொள்ள தயாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், மத்திய புலனாய்வு அமைப்புகள், குறிப்பாக மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் உள்ள அமைப்புகளின் தன்னாட்சி மற்றும் செயல்முறைபற்றிக் கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் மத்திய புலனாய்வு அமைப்புகளை வற்புறுத்திக் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பெற்ற நன்கொடை உள்பட பாஜகவின் நிதிகள்குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.


