
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., ஐ அவரது வீட்டில் பா.ம.க., எம்.எல்.ஏ., க்கள் 3 பேர் சந்தித்து பேசினர்.
சென்னை: பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்தநிலையில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., ஐ அவரது வீட்டில் பா.ம.க., எம்.எல்.ஏ., க்கள் 3 பேர் சந்தித்து பேசினர். அப்போது, பா.ம.க., கூட்டணியில் இணைய வேண்டும் என இ.பி.எஸ்., அழைப்பு விடுத்து உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
சதாசிவம், வெங்கடேசன், சிவகுமார் ஆகியோர் இ.பி.எஸ்., ஐ, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தனர். இந்தச் சந்திப்பு சுமார் 10 நிமிடங்கள் நீடித்தது. லோக்சபா தேர்தலில் எந்தக் கூட்டணியில் இடம்பெறுவது எனப் பா.ம.க., அறிவிக்காத நிலையில், இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.
இந்தச் சந்திப்பின்போது, லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., வும் பா.ம.க., வும் இணைந்து போட்டியிட வேண்டும் எனவும், இதற்காகப் பா.ம.க., கூட்டணிக்கு வர வேண்டும் என இ.பி.எஸ்., அழைப்பு விடுத்து உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இ.பி.எஸ்., கூறியதை, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மற்றும் மாநில தலைவர் அன்புமணியிடம் எம்.எல்.ஏ., க்கள் கூறியுள்ளதாகவும் தெரிகிறது.

