அண்ணாமேம்பாலம் அருகே உள்ள செம்மொழி பூங்காவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

Advertisements

சென்னை: சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள செம்மொழிப் பூங்காவில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். செம்மொழிப் பூங்கா அருகே மீட்கப்பட்ட ரூ.1000 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தையும் முதல்வர் ஆய்வு செய்தார். மீட்கப்பட்ட அரசு நிலத்தில் பிரம்மாண்டமாக நவீன வசதிகளுடன் பூங்கா கட்ட அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். சிங்கப்பூரில் உள்ளது போன்று சிறப்பான உட்கட்டமைப்புகளுடன் பூங்கா அமைக்க அரசு திட்டம் வகுத்துள்ளனர்.

சென்னை அண்ணா மேம்பாலத்தை ஒட்டியுள்ள கதீட்ரல் சாலையில் அரசுக்குச் சொந்தமான நிலத்தில் அதிமுக பிரமுகரான தோட்டக்கலை வி.கிருஷ்ணமூர்த்தி என்பவர், ‘விவசாய தோட்டக்கலைச் சங்கம்’ என்ற ஒரு தனியார் அமைப்பை உருவாக்கி அந்த நிலத்தைப் பயன்படுத்தி வந்தார்.

அங்கு குத்தகை அடிப்படையில் செயல்பட்ட தனியார் டிரைவ்-இன் உணவு விடுதி வசம் இருந்த நிலத்தை மீட்ட தமிழக அரசு, அந்த இடத்தில் செம்மொழிப் பூங்காவை உருவாக்கியது. இந்நிலையில், செம்மொழிப் பூங்காவுக்கு எதிரே உள்ள சுமார் ரூ.1000 கோடி மதிப்பிலான நிலத்துக்கு கிருஷ்ணமூர்த்தி சொந்தம் கொண்டாடினார். தற்போது அந்த நிலமும் தமிழக அரசால் மீட்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் சட்டப்போராட்ட நடத்தி மீட்கப்பட்ட சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் அரசிற்கு சொந்தமான 6.3 ஏக்கர் நிலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலாளர் சி. சமயமூர்த்தி, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் டாக்டர் ஆர். பிருந்தா தேவி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *