
கோவில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியத் தொகையான ரூ.4 ஆயிரம் மற்றும் உயர்த்தப்பட்ட குடும்ப ஓய்வூதியத் தொகையான ரூ.2 ஆயிரம் ஆகியவற்றிற்கான காசோலைகளை ஓய்வூதியம் பெறும் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்…
சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஓய்வுபெறும் கோவில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் இதுவரை ரூ.3000 ஆகும். “கோவில் பணியாளர்களின் நலன் கருதி அவர்களுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.4 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்” என்றும், “ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற்று வந்த பணியாளர் இறந்துவிட்டால் அவரின் வாரிசுதாரருக்கு மாதந்தோறும் ரூ.1500 குடும்ப மாத ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருவதை ரூ.1500-ல் இருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்” என்றும் சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்புகளைச் செயல்படுத்திடும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியத் தொகையான ரூ.4 ஆயிரம் மற்றும் உயர்த்தப்பட்ட குடும்ப ஓய்வூதியத் தொகையான ரூ.2 ஆயிரம் ஆகியவற்றிற்கான காசோலைகளை ஓய்வூதியம் பெறும் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு வழங்கினார்.
இதன்மூலம் ஆண்டொன்றுக்கு 2,454 ஓய்வூதியதாரர்களும், 304 குடும்ப ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவர். தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன், ஆணையர் முரளீதரன், கூடுதல் ஆணையர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.



