
கீழடி கண்டேன், பெருமிதம் கொண்டேன் என்று, கீழடி அருங்காட்சியகத்திற்கு சென்று பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். அவர் முடிவுற்ற நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து, கீழடி அருங்காட்சியகத்திற்கு சென்று பார்வையிட்டார். அதன்பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில், கீழடி கண்டேன், பெருமிதம் கொண்டேன் என்ற தலைப்பில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், திறந்து வைத்த 30 மாதங்களில், 12 லட்சம் பார்வையாளர்களைக் கீழடி அருங்காட்சியகம் கவர்ந்துள்ளது என்றும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து வருவோரும், தமிழரின் தொன்மை கவினுறக் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதை கண்டு வியப்பதை, இன்று திடீர் ஆய்வுக்காக அங்குச் சென்றபோது அறிந்துகொண்டேன் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும், கீழடி திறந்தவெளி அருங்காட்சியகமும், வரும் ஜனவரியில் திறக்கப்பட உள்ளது எனவும், பொருநை அருங்காட்சியகம் வரும் டிசம்பரிலேயே மக்கள் பார்வைக்குத் திறக்கப்பட உள்ளது, கங்கைகொண்ட சோழபுரத்தில், மற்றுமொரு அருங்காட்சியகம் எழுந்து வருகிறது,
பூம்புகார் ஆழ்கடல் ஆய்வுகள் தொடங்கிவிட்டன என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், நிலத்திலும், நீரிலும், இலக்கியத்திலும் ஆய்ந்து, இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு தமிழ்நிலத்திலிருந்து தொடங்கித்தான் எழுதப்பட வேண்டும் என்பதை உறுதிசெய்து வருகிறது,
நமது திராவிட மாடல் அரசு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



