
விசாரணை தொடக்க நிலையிலேயே உள்ளது. ஆகவே முன் ஜாமீன் தர இயலாது என, தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து, மதுரை நீதிமன்ற நீதிபதி ஜோதிராமன் உத்தரவிட்டார்.
கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில், தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் ஆனந்த், இணைபொதுச்செயலாளர் நிர்மல்குமாரின் முன் ஜாமீன் மனுக்கள் மீது விசாரணை துவங்கியது. மதுரை நீதிமன்றத்தில் நீதிபதி ஜோதிராமன் முன்பாக, முன் ஜாமீன் மனுக்கள் மீது விசாரணை நடைபெற்றது.
நாமக்கல் விவகாரத்தில் ஒருவரின் ஜாமீன் மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது என அரசு தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கூட்டத்தின் ஏற்பாட்டாளர் மற்றும், மாவட்ட செயலாளர் மதியழகன்தான் கைது செய்யப்பட்டுள்ளார்.
எங்கள் தொண்டர்களை கொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும், வேண்டுமென்றே தாமதமாக வந்தது போல் கூறப்படுகிறது என்றும், எப்.ஐ.ஆர்-ரில் தவறான தகவல் உள்ளது என்றும், வேலுச்சாமிபுரத்தில் அனுமதி கோரிய போது, காவல்துறை மறுத்திருக்கலாம், கூட்டத்தில் காவல்துறை தடியடி நடத்தியது, கரூரில் நடந்தது திட்டமிட்ட செயல் அல்ல, விபத்து என ஆனந்த் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டது.
இந்தநிலையில், கரூர் நெரிசல் வழக்கில் 2-ஆம் குற்றவாளியாக ஆனந்த், 3-ஆம் குற்றவாளியாக நிர்மல்குமார் சேர்க்கப்பட்டுள்ளனர். கரூரில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நீதிமன்றத்தை தொந்தரவு செய்கிறது. மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியை கொண்டு சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
விசாரணை தொடக்க நிலையிலேயே உள்ளது. ஆகவே முன் ஜாமீன் தர இயலாது. தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதி ஜோதிராமன் உத்தரவிட்டார்.




