
தாவர எண்ணெய்கள், எத்தனால் ஆகிய எரிபொருட்கள் இந்தியாவின் எரியாற்றல் மாற்றத்தை முன்னெடுக்கும் முதன்மையான தூணாக உள்ளதாக மத்தியச் சாலைப் போக்குவரத்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உலக உயிரி எரிபொருள் நாளையொட்டிப் பிரஜ் இண்டஸ்ட்ரி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசினார்.
அப்போது தாவர எண்ணெய்கள், எத்தனால் ஆகிய எரிபொருட்கள் இந்தியாவின் எரியாற்றல் மாற்றத்தை விரைந்து முன்னெடுக்குச் செல்வதாகத் தெரிவித்தார். அவை பெட்ரோலியம், நிலக்கரி ஆகிய புதைபடிவ எரிபொருட்களின் இறக்குமதியைச் சார்ந்திருப்பதையும், அவற்றால் வெளியாகும் கரிப்புகை மாசையும் குறைப்பதாகவும் நிதின் கட்கரி தெரிவித்தார்.
நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு எத்தனால் கலந்த எரிபொருள், உயிரி எரிபொருள் ஆகியவற்றுக்கு ஊக்கத்தொகை வழங்குவது, ஊரகங்களுக்கு அதிகாரமளித்தலையும், மாசில்லா எரியாற்றலை உண்டாக்கக் கடமைப்பட்டுள்ளதைக் காட்டுவதாகக் குறிப்பிட்டார்.
உயிரி எரிபொருள் துறையில் புத்தாக்கங்களைப் புனைந்து இந்தியாவின் நீடித்த எதிர்காலத்துக்கு உதவியாக இருக்கும் பிரஜ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு அமைச்சர் நிதின் கட்கரி நன்றி தெரிவித்தார்.


