
அசைவ உணவுகளில் மீன், மட்டன் மற்றும் சிக்கனை அடுத்து அனைவரும் விரும்பி சாப்பிட கூடியது நண்டு தான். மற்ற குழம்புகளை விட நண்டு குழம்பு வைத்தால் ஊரே மணக்கும் என்று கூறுவார்கள்.
குழம்பு வாசனையாக இருந்தால் மட்டும் போதுமா அதன் ருசியும் அருமையாக இருக்க வேண்டும். எனவே ஊரே மணக்கும் அளவிற்கு வாசனையும் ருசியும் உடைய செட்டிநாடு நண்டு குழம்பு செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:

நண்டு- 1 கிலோ.
எண்ணெய்- தேவையான அளவு.
சோம்பு- 3 ஸ்பூன்.

பச்சை மிளகாய்- 10.
மஞ்சள் தூள்- 1 ஸ்பூன்.
இஞ்சி பூண்டு விழுது- 2 ஸ்பூன்.

தக்காளி- 4.
சின்ன வெங்காயம்- 25.
மிளகாய் தூள்- 5 ஸ்பூன்.
கரம் மசாலா- 2 ஸ்பூன்.தேங்காய் துருவல்- 1 கைப்பிடி.
கொத்தமல்லி இலை- சிறிதளவு.
கறிவேப்பிலை- சிறிதளவு.
கடலை பருப்பு- 2 ஸ்பூன்.
உப்பு- தேவையான அளவு.

செட்டிநாடு நண்டு குழம்பு செய்முறை:
முதலில், அடுப்பில் கடாயை வைத்து அதில் 2 அல்லது 3 ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் சேர்த்து கொள்ளுங்கள்.
எண்ணெய் லேசாக சூடானதும், அதில் நறுக்கி வைத்த சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை சேர்த்து லேசாக வதக்கி எடுத்து கொள்ளுங்கள்.
பிறகு, அதே கடாயில் கடலை பருப்பு சேர்த்து அதனையும் லேசாக வறுத்து எடுத்து கொள்ளுங்கள். இப்போது, ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய் மற்றும் வறுத்த கடலை பருப்பை சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்து ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ளுங்கள்.
அடுத்து, மிக்ஸி ஜாரில் வதக்கி வைத்த வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.
இப்போது, அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். எண்ணெய் சூடானதும், அதில் சோம்பு போட்டு தாளித்து சுத்தம் செய்து வைத்துள்ள நண்டு, இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா, மஞ்சள் தூள் மற்றும் அரைத்து வைத்துள்ள வெங்காயம் தக்காளி பேஸ்ட் சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
இந்நிலையில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். நண்டு வெந்ததும், அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்டினை சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிட்டு, சிறிதளவு கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் காரசாரமான செட்டிநாடு நண்டு குழம்பு தயார்.!

