
சென்னையில் பெய்த பெரும் மழையால், தொடர்ந்து தூய்மைப் பணியானது முடங்கியுள்ளது.
இதனால் சாலைகளில் ஆங்காங்கே தேங்கியுள்ள குப்பைகளால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களை டிச. 4 அன்று புரட்டிப் போட்ட மிக்ஜாம் புயல் (MICHAUNG), டிச. 5 ஆம் தேதி அன்று ஆந்திர மாநிலம், பாபட்லா அருகே கரையைக் கடந்தது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழையால் ஏற்பட்ட வெள்ள நீர் வடிந்தாலும் கூட, இன்னும் சில பகுதிகளில் வெள்ள நீர் வடியாததால் மக்கள் வீட்டிலும், நிவாரண முகாம்களிலும் முடங்கியுள்ளனர்.
இந்த புயலால் சென்னையில் வேளச்சேரி, பள்ளிக்கரணை, வியாசர்பாடி, வண்ணாரப்பேட்டை, ஒக்கியம், துரைப்பாக்கம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம், மேற்கு தாம்பரம் ஆகிய பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புயல், வெள்ளம்
காரணமாக பொதுமக்கள் கடந்த 3 நாட்களாக சேர்த்து வைத்திருந்த குப்பையை தெரு ஓரங்கள், காலி நிலங்கள் மற்றும் நீர்நிலைகளின் அருகில் கொட்டி வருகின்றனர். இதனால் சென்னை நகரின் ராயப்பேட்டை, மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், அடையாறு, பட்டினப்பாக்கம், அம்பத்தூர், கொரட்டூர், பாடி, வில்லிவாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் குப்பை குவியல்களாக காட்சியளிக்கின்றன.

