Chennai drugs:ரூ.110 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்…முக்கிய புள்ளிகளுக்கு வலை!

ஆஸ்திரேலியாவுக்கு கடத்தவிருந்த 112 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை:சென்னை துறைமுகத்திலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் சரக்குக் கப்பல், நேற்று முன்தினம் புறப்படத் தயாராகிக் கொண்டு இருந்தது. அந்தச் சரக்கு கப்பலில் பெருமளவு போதைப்பொருட்கள் சென்னையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்படுவதாக, சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளின் தனிப்படையினர் சென்னை துறைமுகத்துக்குச் சென்று, புறப்படத் தயாரான சரக்குக் கப்பலை நிறுத்தி வைத்து விசாரணை நடத்தினர்.

அதில் 450 மூட்டைகளில் தலா 50 கிலோ ‘குவார்ட்ஸ்’ பவுடர் இருந்தது. மூட்டைகளை தனித்தனியாகப் பரிசோதித்ததில், மொத்தம் 450 மூட்டைகளில் 37 ‘குவார்ட்ஸ்’ தூள் மூட்டைகளின் அடிப்பகுதியில், தலா 3 கிலோ ‘சூடோ எபிட்ரின்’ கொண்ட 37 பாக்கெட்டுகள் ஆழமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

112 கிலோ ‘சூடோ எபிட்ரின்’ போதைப்பொருள் அடங்கிய பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 2 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதன் மதிப்பு ரூ.110 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது. கடத்தல்காரர்கள் பயன்படுத்திய 2 சொகுசு கார்கள் மற்றும் ரூ.3.9 லட்சம் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *