chennai:பெண்ணைத் தாக்கிய மாமன், மச்சான் கைது!

மது போதையில் பெண் உட்பட இருவரை சரமாரியாகத் தாக்கிய மாமன், மச்சான் ஆகியோரை பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

சென்னை, வியாசர்பாடி சி கல்யாணபுரம் ஐந்தாவது தெருவைச் சேர்ந்தவர் சின்னமணி (36). இவர் கூலி வேலை செய்து வருகிறார். நேற்று மதியம் 3 மணியளவில் இவருக்கு நன்கு அறிமுகமான நபர் ஒருவர் மாடு வாங்குவதற்காக அப்பகுதிக்கு வந்துள்ளார்.

அப்போது அவரை வியாசர்பாடி சி கல்யாணபுரம் ஒன்றாவது தெருவைச் சேர்ந்த வேங்கையன் (25) மற்றும் பிரவீன் குமார் (23) ஆகிய இருவரும் மாடு வாங்க வந்த நபரைத் தடுத்து பணம் கேட்டுப் பிரச்சினை செய்துள்ளனர். இவர்கள் இருவரும் மாமன் மச்சான் உறவினர்கள். இந்நிலையில் அதனைச் சின்னமணி தட்டிக் கேட்டுள்ளார். அப்பொழுது மாட்டின் உரிமையாளர் சோனியா (25) என்பவர் அங்கு வந்து ஏன் இவ்வாறு குடிபோதையில் பிரச்சனை செய்கிறீர்கள் எனக் கேட்டுள்ளார்.

அப்போது மதுபோதையில் இருந்த வேங்கையன் மற்றும் பிரவீன் குமார் சின்னமணி மற்றும் சோனியாவை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த இருவரும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து இருவரும் வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

வியாசர்பாடி பொறுப்பு இன்ஸ்பெக்டர் கிருபாநிதி தலைமையிலான போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். வேங்கையன் மற்றும் பிரவீன் குமார் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்கள்மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *