
ஐதராபாத்: ஐதராபாத் நம்பள்ளி ரயில் நிலையம் அருகே சார்மினார் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னையிலிருந்து சென்ற ரயில் தண்டவாளத்திலிருந்து இறங்கி சுவர்மீது மோதியதில் 5 பேர் காயம் அடைந்துள்ளனர்.
நேற்று இரவு சென்னையிலிருந்து சார்மினார் விரைவு ரயில் புறப்பட்டு ஐதராபாத் சென்று கொண்டிருந்தது. இன்று காலை ஐதராபாத் நகரில் உள்ள நம்பள்ளி ரயில்நிலையம் அருகே மெதுவாக வந்து கொண்டிருந்தபோது முன்பகுதி பெட்டிகள் திடீரெனத் தடம் புரண்டது.
இதனால் தடம் புரண்ட ரயில் பெட்டிகள் நடைமேடை மீது மோதியதால் அங்கிருந்த 5 பயணிகளுக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ரயில் தடம் புரண்டதையடுத்து அங்கு வந்த ரயில்வே போலீசார் காயமடைந்த பயணிகளை மீது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வேறேதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்தப் பதற்றமான சூழ்நிலையில் பயணிகளை மீட்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுப்பட்டுள்ளனர். ரயில் தடம் புரண்டதற்கான காரணங்கள் இன்னும் சில மணி நேரங்களில் வெளியாகும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


