
ஏழைகளுக்குப் பணம் ஒதுக்காமல், சென்னையில் கார் பந்தயம் நடத்துவதற்கு பணம் ஒதுக்குவது முக்கியமா? என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் குற்றம்சாட்டி உள்ளார்.
சேலம்: இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி: சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், கார் பந்தயம் நடத்த ரூ.40 கோடி ஒதுக்கியது கண்டிக்கத்தக்கது. மழை பாதிப்புக்கு இடையே சென்னையில் கார் பந்தயம் அவசியமா?
ஏழைகளுக்குப் பணம் ஒதுக்காமல் கார் பந்தயத்திற்கு பணம் ஒதுக்குவது முக்கியமா? இந்தப் போட்டியைப் பணக்காரர்கள் தான் பார்க்கிறார்கள். மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது.
அரசு பல்நோக்கு மருத்துவமனை, அரசு ராஜிவ்காந்தி மருத்துவமனை, சென்ட்ரல் ரயில் நிலையம், ராணுவ குடியிருப்புத் தலைமை செயலகம், துறைமுகமுள்ள முக்கிய பகுதிகளில் கார் பந்தயம் நடத்த வேண்டியது அவசியம் என்ன? இருங்காட்டுகோட்டையில் கார் பந்தயம் நடத்த உரிய வசதியுள்ள நிலையில், சென்னையில் கார் பந்தயம் நடத்துவது வீண் செலவு. அம்மா உணவகத்திற்கு உரிய நிதி ஒதுக்காத நிலையில் கார் பந்தயத்திற்கு ரூ.40 கோடி தேவையா?.
தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி உருவாகும். அறிவிக்கப்பட்ட பிறகு அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள்குறித்து அறிவிப்பு வெளியாகும். சட்டசபையில் பொதுவான நபர்போல் சபாநாயகர் பேசுவது கிடையாது. சபாநாயகரை மதிக்கும் கட்சி அதிமுக. அமலாக்கத்துறை குறித்து சபாநாயகர் பேச்சைப் பொருட்படுத்த தேவையில்லை. இவ்வாறு இபிஎஸ் கூறினார்.

