
6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது…
புதுடெல்லி: கேரளாவில் உம்மன்சாண்டி மறைவால் காலியான புதுப்பள்ளி தொகுதி மற்றும் திரிபுராவில் 2 தொகுதி, ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள தலா ஒரு தொகுதியென மொத்தம் 7 தொகுதிகளுக்குச் செப்டம்பர் 5-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும், அவற்றின் வாக்கு எண்ணிக்கை செப்டம்பர் 8-ந் தேதி நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் உத்தர பிரதேசத்தின் கோசி தொகுதி எம்.எல்.ஏ. தாராசிங், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க.வில் இணைந்ததால் அந்த இடம் காலியானது. மற்ற தொகுதிகளின் உறுப்பினர்கள் மறைவால் அந்த இடங்கள் வெற்றிடமானது.
இந்நிலையில், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், கேரளா உட்பட 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை முதலே வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
6 மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன. இன்று பதிவாகும் வாக்குகள் வரும் 8-ம் தேதி எண்ணப்படுகின்றன.

