
Jaya Prada | Egmore court complex
நடிகையும், முன்னாள் எம்.பி., யுமான ஜெயப்பிரதா உள்ளிட்ட மூவருக்கு, எழும்பூர் நீதிமன்றம் 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது…
சென்னை : இந்திய சினிமாவில் 70 மற்றும் 80களில் தவிர்க்க முடியாத முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தவர் நடிகை ஜெயப்பிரதா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நடித்து உள்ளார். என்.டி ராமா ராவின் தெலுங்கு தேசக் கட்சியில் 1994ஆம் ஆண்டு ஜெயப்பிரதா தன்னை இணைத்துக் கொண்டார். பின்னர் அந்தக் கட்சியிலிருந்து விலகிச் சந்திரபாபு நாயுடு பிரிவில் இணைத்துக் கொண்டார். அதன் பின்னர் சமாஜ்வாதி கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். 2004 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்த பொதுத் தேர்தலின்போது ராம்பூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த ராம் குமார், ராஜ்பாபு ஆகியோருடன் சேர்ந்து, அண்ணா சாலையில் திரையரங்கம் ஒன்றை நடத்தி வந்தார். அங்குப் பணிபுரிந்த தொழிலாளர்களிடம் வசூலிக்கப்பட்ட இ.எஸ்.ஐ., தொகையைத் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை என்ற புகார் எழுந்தது. இது தொடர்பாக, தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம், எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை எதிர்த்து, ஜெயப்பிரதா உள்ளிட்ட மூவரும், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரணையின்போது எழும்பூர் நீதிமன்றத்தில், ஜெயப்பிரதா தரப்பில், தொழிலாளர்களிடம் பெற்ற தொகையைச் செலுத்திவிடுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இதற்கு, தொழிலாளர் அரசு காப்பீட்டு கழக வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், ஜெயப்பிரதா உள்ளிட்ட மூவருக்கும் 6 மாதம் சிறை தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

