திண்டுக்கல்லில் காங்கிரஸ் கட்சியினரும், பாஜகவினரும் மாறிமாறி தாக்கிக்கொண்டு அராஜகத்தில் ஈடுபட்டதால் பொதுமக்களும் பள்ளி குழந்தைகளும் அச்சத்தில் தலை தெறித்து ஓடினர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
திண்டுக்கல் மாவட்ட மாநகர காங்கிரஸ் கட்சி தலைவர் மணிகண்டன் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அவதூராகபேசி வருவதாக கூறி பாஜகவினர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் மணிகண்டன் மீது அவதூறு வழக்கு பதிவு செய்து, காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை முற்றுகையிடபோவதாக கூறியிருந்தனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியினரும் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியப்படி கூடி இருந்தனர்.
இந்தநிலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினர் காங்கிரஸுக்கு எதிராக கோஷமிட்டு கொண்டிருந்த பொழுது பாஜக கூட்டத்திலிருந்து சிலர் போலீசாரின் தடுப்பு காவலையும் மீறி காங்கிரஸ் கட்சி அலுவலகம் அருகே ஓடி சென்று ஆபாசமான வார்த்தைகளை கூறிக் கொண்டு காங்கிரஸார் மீது கற்களை கொண்டு எறிந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
காங்கிரஸ் கட்சியினர் மீது கற்களை கொண்டு எறிந்த பாஜகவினரை கைது செய்ய வேண்டும் என கூறி காங்கிரஸார் சாலையில் அமர்ந்தும், படுத்தும் மறியலில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட வந்துபோது காங்கிரஸார் மீது தாக்குதல் நடத்தியதாக பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பின்னர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் காங்கிரஸாரையும் காவல்துறையினர் கைது செய்தனர். பேருந்து நிலையத்தின் மத்தியில் பாஜகவினர் திடீர் அராஜகத்தில் ஈடுபட்டதால் பொதுமக்களும் பள்ளி குழந்தைகளும் அச்சத்தால் தலை தெறித்து ஓடினர்.இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

