
ஐந்து மாநிலத் தேர்தலிலும் பாஜகவிற்குச் சாதகமான சூழல் நிலவுவதாகவும், அரசியலுக்குப் புதிதாக வந்துள்ள விஜய்யுடன் கூட்டணி அமைக்க வேண்டிய அவசியம் எழாது என்றும் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் தெரிவித்துள்ளார்.
ஐந்து மாநில சட்டசபை தேர்தல் நிலவரம் குறித்து தனியார் செய்தி சேனல் கேட்ட கேள்விக்கு பா.ஜ.க. தேசிய தலைவர் நிதின் நபின் கூறியதாவது, அசாம் மற்றும் புதுச்சேரியில் பா.ஜனதா அரசு மீண்டும் அமைவது உறுதி என்றும், மேற்கு வங்கத்தில் முதல்முறையாக பா.ஜனதா 100 சதவீதம் ஆட்சி அமைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் தி.மு.க.வின் ஊழல், அராஜகம் மற்றும் சனாதன எதிர்ப்பு ஆகியவற்றால் அக்கட்சிக்குக் கணிசமான பின்னடைவு ஏற்படும் என்றும், தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்றும் கூறினார்.
மேலும், அரசியலுக்குப் புதிதாக வந்துள்ள விஜய் உடனடியாகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது எனக் குறிப்பிட்ட அவர், தேர்தலுக்குப் பின் விஜய்யுடன் கூட்டணி அமைக்க வேண்டிய அவசியம் எழாது என்றும், தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி தனித்தே ஆட்சி அமைக்கும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.




