ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக பாஜக அறிவிப்பு!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவால் அந்தத் தொகுதியில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

கடந்த 10-ந்தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. வருகிற 17-ந்தேதி மனு தாக்கல் செய்யக் கடைசி நாள்.

தி.மு.க. கூட்டணியில் தனது கைவசம் இருந்த இந்தத் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட விரும்பாததால் தி.மு.க. போட்டியிடுகிறது. தி.மு.க. சார்பில் சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

இவர் தே.மு.தி.க.வில் இருந்தபோது இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்ததை போல் ஈரோடு கிழக்கு தொகுதியிலும் போட்டியிடாமல் புறக்கணித்துள்ளது.

அதன் கூட்டணி கட்சியான தே.மு.தி.க.வும் போட்டியிடவில்லை என்று அறிவித்து விட்டது.

எனவே தி.மு.க.வை எதிர்த்துப் போட்டியிட போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தற்போதைய நிலையில் நாம் தமிழர் கட்சி மட்டும் போட்டியிட போவதாக அறிவித்துள்ளது. வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாகப் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *