
அதிமுகவிற்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் முன்னாள் எம்ஏக்களை பாஜக தங்கள் கட்சியில் இணைத்துக்கொண்ட நிலையில், தற்போது அவர்கள் மீண்டும் அதிமுகவிற்கே திரும்பத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில் முன்னாள் எம்எல்ஏ சின்னசாமி அதிமுகவில் தன்னை மீண்டும் இணைத்துக்கொண்டார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதலாலும், அதிகார போட்டியின் காரணமாகவும் பல பிளவுகளாகப் பிரிந்து கிடக்கிறது. இந்தச் சூழ்நிலையில் தான் கடந்த 2019ஆம் ஆண்டு பாஜகவோடு அதிமுக கூட்டணி வைத்தது. இந்த இரண்டு கட்சிகளுக்கும் இணைந்து சந்தித்த தேர்தல்களில் தோல்வியே பரிசாகக் கிடைத்தது. அப்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிமுகவிற்கு எதிராகக் கருத்துகளைக் கூற தொடங்கினார். இதற்கு அதிமுக நிர்வாகிகளும் பதிலடி கொடுத்தனர்.
தமிழகத்தில அதிமுகவை விடப் பாஜக வளர்ந்து விட்டதாகக் கூறிய அவர்கள் அதிமுக முன்னாள் எம்எல்ஏக்களை தங்கள் அணிக்கு இழுத்தனர். ஒரே நேரத்தில் 10க்கும் மேற்பட்ட மாஜி எம்எல்ஏக்கள் இணைந்தது அதிமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாஜகவில் இருந்தும் முக்கிய தலைமை பொறுப்பில் இருந்த நிர்வாகிகளைத் தங்கள் அணிக்கு அதிமுக இழுத்தது.
மீண்டும் அதிமுகவிற்கே திரும்பிய மாஜி எம்எல்ஏ
இப்படி இரண்டு கட்சிகளுக்கும் இடையே மோதல் உச்சத்தை தொட்டது. இனி பாஜகவோடு கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டை அதிமுகவினர் எடுத்தனர். இந்தநிலையில் அதிமுகவில் சிங்கநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சின்னசாமி கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்தார். அங்கு அவருக்குரிய மரியாதை கிடைக்காத காரணத்தால் மீண்டும் அதிமுகவிற்கே பல்டி அடித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் தோல்வி தொடர்பாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வரும் நிலையில் அதிமுக தலைமை அலுவலகம் வந்தவர் தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார். இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகிய, அண்ணா தொழிற்சங்கப் பேரவை முன்னாள் செயலாளர் R. சின்னசாமி, Ex. M.L.A., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார்.


