
டெல் அவிவ்: காசாவில் ஆறு பிணைக்கைதிகளை உயிருடன் மீட்க முடியாததற்கு நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்.,7 அன்று தாக்குதல் நடத்தி சுமார் 1,200 பேரைக் கொலை செய்தனர். 250 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதனையடுத்து ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஹமாஸ் அமைப்பினர், பிணைக்கைதிகள் 6 பேரை கொன்றனர். அவர்களின் உடல்களை சுரங்கத்தில் இருந்து இஸ்ரேலிய ராணுவம் மீட்டது. இதனால், இஸ்ரேல் மக்கள் அந்நாட்டின் பல நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நெதன்யாகு அரசு, பிணைக்கைதிகளை மீட்க தவறிவிட்டதாக குற்றம்சாட்டினர்.
இந்நிலையில் நிருபர்களை சந்தித்த பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது: பிணைக்கைதிகளை உயிருடன் மீட்க முடியாததற்கு உங்கள் அனைவரிடமும் மன்னிப்பு கோருகிறேன். அவர்களை நாங்கள் நெருங்கியும் மீட்க முடியவில்லை. இதற்காக ஹமாஸ் அமைப்பினர் கடும் விலை கொடுக்க வேண்டியிருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

