
சென்னை: பெங்களூரு குண்டுவெடிப்பில் தமிழர்களைத் தொடர்புபடுத்தி பேசிய ஒன்றிய அமைச்சர் ஷோபாவுக்கு எதிராகத் திமுக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.
ஒன்றிய அமைச்சர் சோபா பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழர்கள் தான் காரணம் என்று கூறிய கருத்தானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்குத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்தனர். ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் தமிழர்களைத் தொடர்புப்படுத்தி தான் தெரிவித்த கருத்துகளுக்காகக் கர்நாடகாவைச் சேர்ந்த ஒன்றிய இணை அமைச்சர் ஷோபா மன்னிப்பு கோரினார்.
இந்நிலையில், தமிழ்நாட்டு மக்களை இழிவுப்படுத்தியும் பேசிய ஒன்றிய அமைச்சர் ஷோபா மற்றும் பாஜக மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இந்திய தேர்தல் ஆணையத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்துள்ளார். அந்தப் புகார் மனுவில் தமிழ்நாட்டிற்கும், கர்நாடகாவுக்கு இடையே ஒரு சுமுகமான உறவு நீடித்து வரும் நிலையில், தமிழ்நாட்டு மக்களை இழிவுப்படுத்தியும் பேசியது இரு மாநிலங்களுக்கு இடையே வன்முறை மற்றும் கலவரத்தைத் தூண்டும் வகையில் உள்ளது.
இது தேசிய ஒற்றுமையை, இந்திய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் விதமாகப் பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கிவரும் நிலையில், இது போன்ற கருத்துக்களை ஒன்றிய அமைச்சர் பேசியிருப்பது நாட்டில் பிரிவினை வாதத்தை ஏற்படுத்தும். எனவே அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திப் புகார் மனுவை அளித்துள்ளார். இந்தப் புகார் மனு அடிப்படையில் ஒன்றிய அமைச்சர் ஷோபா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


