
பெங்களுரு: காவிரி நீர்ப் பிரச்சினை காரணமாகக் கர்நாடகாவில், முழு கடை அடைப்பு மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்திலும் பந்த் நடைபெற்ற நிலையில், கர்நாடகாவின் தலைநகர் பெங்களுருவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினருக்கு வழங்கப்பட்ட காலைச் சிற்றுண்டியில், இறந்த எலி இருந்துள்ளது.
இந்த உணவானது அருகாமையில் உள்ள ஒரு உணவகத்திலிருந்து தருவிக்கப்பட்டதாகத் தெரிகிறது. எலியைக் கண்டு அதிர்ச்சியடைந்த காவல் துறை அதிகாரிகள், போக்குவரத்து உயர் அதிகாரியான அனுசேத் என்பவருக்குத் தகவல் தெரிவித்தனர். உடனே உணவு விநியோகித்த ஓட்டல் அதிபர் மற்றும் அங்குப் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களும் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். மேலும் உணவக உரிமையாளர்மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
180 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்ட நிலையில், அதில் ஒரு பொட்டலத்தில் இறந்த எலி இருந்தது தெரியவந்துள்ளது.


