
ஆசிய கபடிப் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித் தந்து நாடு திரும்பிய தமிழக வீராங்கனை கிருத்திகாவுக்குச் சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பக்ரைன் நாட்டில் நடைபெற்ற ஆசிய கபடி இறுதிப் போட்டியில் இந்திய ஆடவர் அணி 35 – 32 என்ற புள்ளிக் ஈரான் அணியை வீழ்த்தித் தங்கப் பதக்கம் வென்றது, அதேபோல் இந்திய மகளிர் அணி 75 – 21 என்ற புள்ளிக் கணக்கில் ஈரான் அணியை வீழ்த்தித் தங்கப் பதக்கம் வென்றது.
இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம் வெல்வதற்குச் சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த கிருத்திகா காரணமாக இருந்தார். அதேபோல் ஆடவர் அணியில் மன்னார்குடி அடுத்த வடுவூரைச் சேர்ந்த அவினேஷ் என்பவரும் இந்திய அணி தங்கப் பதக்கம் வெல்லக் காரணமாக இருந்தார்.
போட்டியில் தங்கப் பதக்கம் வென்று வீராங்கனை கிருத்திகாவும் வீரர் அபினேசும் விமானத்தில் சென்னை திரும்பினர். இவர்களுக்குச் சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா மற்றும் பிற அரசியல் கட்சிப் பிரமுகர்கள் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.


