
பாஜக ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவர்கள் உள்நோக்கத்துடன் கைது செய்யப்படுவதாக, அதிஷி குற்றம்சாட்டியுள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால் கைது:
டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியில் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடக்கப்பட்டுள்ளார். அவரது கைதைக் கண்டித்தும், பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராகவும் ஆம் ஆத்மி பல்வேறு போராட்டங்களை அறிவித்துள்ளது. இந்நிலையில் ஏபிபி சார்பில் நடைபெற்ற ஷிகர் சம்மேளனம் என்ற நிகழ்ச்சியில், டெல்லி அமைச்சர் அதிஷி பங்கேற்றார். அப்போது, டெல்லி முதலமைச்சர் கைது செய்யப்பட்டது, எதிர்கட்சிகளுக்கு எதிராகப் பாஜகவின் திட்டமிட்ட செயல் எனக் குற்றம்சாட்டினார்.
”ஸ்டாலின் கைது செய்யப்படலாம்”
தொடர்ந்து, ”பணமோசடி தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கங்களைக் கவிழ்க்கும் பாஜக ஃபார்முலா வெற்றி பெறாததால் இன்று கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். நாளை மம்தாவை பானர்ஜி, மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன் என அனைத்து எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முதலமைச்சர்களையும் சிறையில் அடைத்து அவர்களின் ஆட்சியைக் கவிழ்ப்பார்கள். சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளைப் பாஜக பயன்படுத்திக்கொள்கிறது. தேர்தலில் வெற்றி பெறும் மாநிலங்களில் மட்டுமின்றி, தோற்கும் மாநிலங்களில் கூட எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைக்கிறார்கள். பல மாநிலங்களில் ஆபரேஷன் தாமரை நடந்துள்ளது. யார், எப்போது, எங்கு, எப்படி பணம் கொடுத்தார்கள் என்பதை வெளிப்படுத்துவோம். பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது என்பது அனைவரும் அறிந்ததே” என அதிஷி சாடினார்.


