
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மாமா விபத்தில் சிக்கியதாகக் கூறி பொய் சொல்லிக் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று அக்காள், தங்கையைக் கூட்டாகப் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள் 5 பேர் கொண்ட கும்பல். அவர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த 25 வயதாகும் இளம் பெண் ஒருவர், அருப்புக்கோட்டை டவுன் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில் அவர் கூறியிருப்பதாவது:- நானும் என் தங்கையும், எங்கள் பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறோம். எங்களது சம்பள பணத்தை வாங்குவதற்காக எனது தங்கை வீட்டிற்கு சென்றிருந்தேன் அப்போது எங்களுக்கு அறிமுகமான ராஜ்குமார் என்பவர் எங்களிடம் வந்து உங்களது மாமா விபத்தில் சிக்கி காயம் அடைந்திருக்கிறார் என்றார் அதை நம்பி நாங்கள் இருவரும் அவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றோம்.
அவர் எங்களை, வாழ்வாங்கி பகுதியில் ஒரு காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு ஏற்கனவே 4 பேர் நின்று கொண்டிருந்தார்கள் திடீரென அவர்கள் வந்து, நாங்கள் சென்ற இருசக்கர வாகனத்தை வழிமறித்தனர். அப்போது அவர்கள் ராஜ்குமாரை தாக்குவது போல் தாக்கினர். இதனால் நாங்கள் அதிர்ச்சி அடைந்து அலறினோம். பின்னர் எங்களை அங்கிருந்த 4 பேரும் மிரட்டிக் கூட்டாகப் பாலியல் பலாத்காரம் செய்தார்கள்” இவ்வாறு அந்தப் புகாரில் கூறப்பட்டிருந்தது. இந்தப் புகாரை வாங்கிய அருப்புக்கோட்டை டவுன் காவல் நிலைய போலீசார், பாதிப்புக்குள்ளான அக்காள், தங்கை இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். சம்பவம் நடந்ததாகக் கூறிய இடத்துக்குச் சென்றும் விசாரித்தனர்.
அப்போது, மேற்கண்ட 4 பேரின் கூட்டாளியாக ராஜ்குமார் இருந்துள்ளார் என்பதும், அந்தப் பெண்களிடம் நைசாகப் பேசி, அந்தப் பகுதிக்கு அழைத்து வருமாறு ராஜ்குமாரிடம் கூறியதும் விசாரணையில் தெரியவந்தது. அதன்படியே ராஜ்குமாரும், அந்தப் பெண்களின் மாமா விபத்தில் சிக்கி உள்ளதாகப் பொய் பேசி அழைத்து வந்துள்ளார். தொடர்ந்து, ராஜ்குமாரை தாக்குவது போல் தாக்கி விரட்டிவிட்டு பாலியல் பலாத்கார சம்பவம் நடந்து இருப்பதாகப் போலீசார் கருதுகிறார்கள்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், ராஜ்குமார், பாலு, மற்றொரு ராஜ்குமார், சுந்தரமகாலிங்கம், கனி ஆகிய 5 பேரைத் தீவிரமாகத் தேடிவருகிறார்கள். பாதிக்கப்பட்ட அக்காள், தங்கை மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கத்துள்ளளனர். இச்சம்பவம் அருப்புக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

