Armstrong : ஆம்ஸ்ட்ராங் வீட்டில் முதலமைச்சர் ஸ்டாலின்.. அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல்!

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆம்ஸ்ட்ராங் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

தமிழகத்தில் கொலை சம்பவம் அதிகரித்து இருப்பதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் தேசிய கட்சியின் மாநில தலைவரான ஆர்ம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தக் கொலை சம்பவத்திற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பாகவும் கேள்வி எழுந்தது. இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக 8 பேர் காவல் நிலையத்தில் சாரணடைந்த நிலையில் குற்றவாளிகள் கொடுத்த வாக்குமூலத்தில் ரவுடி ஆற்காடு சுரேஷ் கடந்த ஆகஸ்ட் மாதம் கொலை செய்யப்பட்டார்.

அவரது கொலைக்கு முக்கிய நபராகத் திகழ்ந்தவர் ஆம்ஸ்ட்ராங் எனத் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தான் தனது அண்ணனின் கொலைக்குப் பழிவாங்கவே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக ஆற்காடு சுரேஷின் தம்பி ஆற்காடு பாலு போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த நிலையில் இந்தக் கொலை சம்பவம் தொடர்பாகப் போலீசார் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்டத்தில் ஆம்ஸ்ட்ராங் உடன் அடக்கம் செய்யப்பட்டது. ஆம்ஸ்ட்ராங் உடலுக்குப் பகுஜன் சமாஜ் கட்சி தேசிய தலைவர் மாயாவதி, தமிழக அமைச்சர் சேகர்பாபு, அதிமுக சார்பாக ஜெயக்குமார், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு நேரில் சென்றார். அங்கு ஆம்ஸ்ட்ராங் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

அப்போது ஆம்ஸ்ட்ராங் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை பெற்றுத் தரப்படும் எனவும் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் அப்போது உறுதியளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *