
பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துக் கிராமமக்கள் கிராமசபை கூட்டத்தை ப் புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
குடியரசுத் தினத்தை முன்னிட்டு இன்று மாநிலம் முழுவதும் கிராமங்கள் தோறும் கிராமசபை கூட்டம் நடத்தப்படுகிறது.திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒன்றியம் இராமநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட தொட்டகளாம்புதூர் கிராமத்தில் குடியரசுத் தினத்தை முன்னிட்டு இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தை இராமநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஊர் பொதுமக்கள் புறக்கணித்தனர்.
இராமநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் அடிப்படை வசதிகள் எதையும் செய்து கொடுக்காமல் இருப்பதாகவும், ஊராட்சி ஒன்றிய பொது நிதி திட்டத்தில் துவக்கப்பட்ட பணிகள் துவங்கிய நிலையிலேயே இருப்பதாகவும், குடிநீர் குழாய்கள் உடைந்து அதனைச் சுற்றிலும் உள்ள சாக்கடை நீர் கலந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் இருப்பதாகவும்,
மேலும், இது போன்ற பல்வேறு குற்றசாட்டுகளை வலியுறுத்தி அனைத்து தரப்பு அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தப் பயனும் இல்லை என்று கூறி இந்தக் கிராம சபை கூட்டத்தைப் பொதுமக்கள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்தனர்.
மேலும், கிராம சபை கூட்டத்திற்கு அதிகாரிகள் வரவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

